Tamil News
Home செய்திகள் தமிழ் அரசியல் கைதி விளக்கமறியல் சிறையில் உண்ணாவிரதம்

தமிழ் அரசியல் கைதி விளக்கமறியல் சிறையில் உண்ணாவிரதம்

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில், முன்னாள் போராளியான அரசியல் கைதி ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் மற்றும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் ஆகிய இருவரையும் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கொழும்பு விளக்கமறியல் சிறைச் சாலைக்குச் சென்று பார்வையிட்டார்கள்.

இதன்போது தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆனந்தவர்ணன் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்ததாகவும், தனது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தான் பொய்க் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் தனது தரப்புக் கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் வழங்கப்படாமலேயே விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வழக்குத் தவணை எப்போது என்று கூடத் தெரியாத நிலையில் தன்னைத் தடுத்து வைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் என்பவரும் இந்தியாவிலிருந்து திரும்பும்போது கைது செய்யப்பட்டு கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தனது விடுதலைக்காகவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன் உறுப்பினர்கள், ஆனந்தவர்ணன் உடல்நலக்குறைவால் அவதியுறுவதாகவும், உணவு தவிர்ப்புப் போராட்டம் தொடர்ந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதனால் அவரது கோரிக்கையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்திள்ளார்கள். மேலும் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளது கவனத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Exit mobile version