பாராளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பிரிவிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடல் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலம் (பராட்டே) என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
“தேசிய பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்கள் 52 சதவீதமளவில் பங்களிப்பு செய்கிறார்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தொழில் முயற்சியாளர்கள் பொறுப்புக்கூற வேண்டிய தேவைகிடையாது. ஆனால், அவர்கள் மீதே பொருளாதார நெருக்கடி சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினாலும், ஊழல் மோசடியாலும் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.
கோவிட் பெருந்தொற்றினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால், கோவிட் தொற்றினால் எமது அண்மை நாடுகளான மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் உள்ளிட்ட நாடுகள் வங்குரோத்து நிலையடையவில்லை. பொருளாதார மீட்சிக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கம் பேச்சளவில் குறிப்பிடுகிறது. ஆனால், செயலளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் சட்டமூலம் தற்காலிகமானதே, 7 மாதங்களை வரையறுத்தே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஏழு மாத காலத்துக்குள் நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையுமா? என்பதை குறிப்பிட முடியாது, ஆகவே, தொழில் முயற்சியாளர்களுக்கு 2 ஆண்டுகளேனும் நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.