Tamil News
Home செய்திகள் ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்

ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்

அண்மையில் ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதைக் கண்டித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இது வழிபாட்டு சுதந்திரத்தை மீறுவதாகவும், ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவை இவ்விடயத்தில் மௌனம் காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவை அழுத்தங்களுக்கு அடிபணிந்து இதை கருத்துச் சுதந்திரம் என அறிவித்தால், உலகளாவிய தெற்கு மற்றும் மேற்கத்திய மதிப்பு அமைப்புகளுக்கு இடையே பிளவு ஏற்படும் என்றார்.

இந்தச் சம்பவத்தை கருத்துச் சுதந்திரச் செயலாகக் கருத முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான மக்கள் இதை மதத்தின் மீதான தாக்குதலாகக் கருதுகின்றனர், ஆனால் இந்தச் செயலை ஆதரித்த சில மேற்கத்திய நாடுகள், கருத்துச் சுதந்திரத்தின் துறைகளை விரிவுபடுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் இடையில் நிறைவேற்றப்பட்ட கடப்பாடுகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அல்குர்ஆன் எரிப்புச் சம்பவம் தொடர்பில் பேசுவதாகக் குறிப்பிட்டார்.

இலங்கையின் சர்வதேசக் கடமைகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்கான தனது உறுதிப்பாட்டை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மறுபுறம் இந்தச் செயல் வழிபாட்டு சுதந்திரத்தை மீறுவதாக அறிவிக்கப்பட்டால், ஐ.நா மனித உரிமைகள் பேரவை கருத்துச் சுதந்திரத்தின் வரம்புகளை வரையறுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை பொதுநலவாய செயலாளர் நாயகத்திடம் எழுப்புமாறு வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும், உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளை உறுதி செய்வதில் பொதுநலவாய அமைப்பும் பங்கு வகிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

உலகளாவிய தெற்கில் அவர்களின் மனித உரிமைகள் விழுமியங்கள் அமைப்பில் உள்ளடக்கப்பட்டு உரிய மரியாதை வழங்கப்படுவதை உறுதி செய்யும் முதல் படி இதுவாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version