Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் திருகோணமலையில் ஈழத்தமிழர் இறைமை இழப்பைத் தடுக்க சம்பந்தர் பதவி விலகல் அவசியம் | ஆசிரியர் தலையங்கம்...

திருகோணமலையில் ஈழத்தமிழர் இறைமை இழப்பைத் தடுக்க சம்பந்தர் பதவி விலகல் அவசியம் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 258

திருகோணமலையில் ஈழத்தமிழர் இறைமை இழப்பைத் தடுக்க சம்பந்தர் பதவி விலகல் அவசியம் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 258

“சுயநிறைவான தன்னில்தானே தங்கி நிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். மக்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையுடைய சனநாயக ஆட்சி முறைமையையே நான் விரும்புகின்றேன். இந்தப் புதிய சமூகத்தில் உழைக்கும் மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவம் நிலவ வேண்டும்” எனத் தேசியத்தலைவர் மேதகு திரு. வே.பிரபாகரன் அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன் 1993 யூலை 15ம் நாளில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழர் தாயகத்துக்கான உட்கட்டுமான அமைப்பை வடிவமைத்தல் தொடர்பாக நிபுணத்துவம் மிக்க கட்டிடக்கலைஞர்கள், குடிசார் பொறியிலாளர், பொறியியலாளர், விரிவுரையாளர்கள், நில அளவையாளர்கள், முன்னெடுத்த ஆய்வு மாநாட்டிற்கு வழங்கிய வாழ்த்து மொழியில் தெளிவாகத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் நிலைப்பாட்டை எடுத்துரைத்திருந்தார். இந்த மக்களின் யாரிலும் தங்கிவாழாத சுதந்திரத்தன்மையையும் சமத்துவத்தையும் சனநாயக மக்களாட்சியையும் கொண்டதாகத் தமிழர் தாயகம் கட்டமைக்கப்பட வேண்டும் என்ற அரசியல் கோட்பாட்டின் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் இந்த ஆய்வுமாநாட்டில் தமிழர் தாயகம் 20 மாநிலங்களாகப் (மாவட்டங்களாகப்) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் நிர்வாகத் தலைமை நகரமும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் திருகோணமலை மாநிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுத் திருகோணமலை அம்மாநிலத்தின் நிர்வாக நகரமாக மட்டுமல்லாமல் முழுத்தமிழர் தாயகத்திற்கும் தலைநகரமாகவும் குறிக்கப்பட்டு இருந்தது. குச்சவெளி மாநிலம்
மற்றும் மூதூர் மாநிலம் திருகோணமலை மாநிலத்திற்குள் அடக்கப்பட்டு இருந்தது. உண்மையில் திருகோணமலை அனைத்துலக வர்த்தகத்துக்கு மட்டுமல்ல இந்துமாக்கடலின் அமைதி பாதுகாப்பு இரண்டுக்கும் முக்கியமான துறைமுக நகரம்.
அதுவும் சீனாவின் ஷி யான் – 6 ஆய்வுக்கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தான முறையில் இந்தியாவின் வெளிப்படையான எதிர்ப்பையும் மீறி திட்டமிட்டபடி சிறிலங்காவின் நாரா நிறுவனத்துடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காகக் கொழும்பு துறைமுகத்துக்குள் வந்துள்ளமை சீனா தனது பாதுகாப்புத் தேவைகளுக்கு இலங்கையைப் பயன்படுத்தும் என்பதை உலகுக்கு உறுதி செய்துள்ளது. சீனா தனது 7.7 பில்லியன் கடனில் 4 பில்லியனை கடன் மறு சீரமைப்புக்குள்ளும் 3.7 பில்லியனை தனியார் கடனாக மாற்றி இலங்கையின் கடன் சீரமைப்புக்கு உதவுவது போல தனியார் கடனை உற்பத்திகள் அதிகரிப்பில் வரும் பணத்தில் முதலில் கட்ட வேண்டிய நிலை வருகையில் தான் முதலில் மீளப்பெறுவதற்கான அல்லது இலங்கையின் கடல்வளத்தை நிலவளத்தைத் தனதாக்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அத்துடன் வடக்கு கிழக்கில் சீனா 1500 மில்லியனை மீன்பிடி துறையில் முதலிடும் திட்டத்தை முன்னெடுக்க மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசியுள்ளது. இவை எல்லாம் திருகோணமலைத் துறைமுகத்தைத் தம்வசப்படுத்தும் சீன இந்திய பொருளாதாரப் போட்டி உச்சக்கட்டத்தை அடைவதை வெளிப்படுத்துகின்றன.
இந்நிலையில் இந்தியா ஈழத்தமிழர்களின் இறைமையுடன் தனது இணைப்புத் தொடர்புகளை கடலிலும் தரையிலும் வானிலும் முன்னெடுத்து ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க முற்படுவதன் மூலமே ஆக்கிரமிப்பாளர் என்ற நிலையில் இல்லாது வடக்கு கிழக்கில் நின்று தன்னைப் பாதுகாக்க வேண்டிய நிலை உருவாகலாம். இதனைத் தடுப்பதற்காகவே திருகோணமலையில் ஈழத்தமிழரின் இறைமையைச் சிறிலங்கா அழிப்பதில் வேகம் கொண்டுள்ளது. இந்நேரத்தில் திருகோணமலையில் சிறிலங்கா மேற்கொள்ளும் ஈழத்தமிழர்களின் இறைமை இழப்புக்குத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும் திருகோணமலை மாவட்டச் சிறிலங்காப் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சட்டத்தரணி இரா. சம்பந்தன் அவர்கள் தான் மூலகாரணமாகவுள்ளார். திருகோணமலையில் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் தான் பாராளுமன்ற உறுப்பினர் எனக்கூறிச் சிங்கள அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களில் படைபல ஆதரவுடன் நில ஆக்கிரமிப்புச் செய்து வாழும் சிங்களர்களையும் திருகோணமலையின் குடிகளாக உலகப் பிரகடனம் செய்தவர் திரு.இரா.சம்பந்தன் தான். இதுவே இன்று திருகோணமலையில் ஆக்கிரமித்த நிலங்களைச் சிங்களப் பிக்குகளும், சிங்கள நில ஆக்கிரமிப்பாளர்களும் இணைந்து தங்களுடையது எனக்கூறி அங்கு வாழும் ஈழத்தமிழர்களுக்கு இனங்காணக்கூடிய அச்சத்தை உருவாக்கக்கூடிய முறையில் பாராளுமன்றத்தின் உள்ளும் வெளியும் வன்முறைப் பேச்சுக்களைப் பேசுவதற்குக் காரணமாகவுள்ளது. அம்பிட்டிய தேரர் வெளிப்படையாகத் தமிழர்களை வெட்டுவோம் கொத்துவோம் என 303 மில்லியன் அனைத்துலக நாணயநிதி உதவியுடன் மட்டும் தீர்க்க இயலாத பொருளாதார நெருக்கடியைத் திசைமாற்ற இனவெறி மதவெறியைத் தூண்டி மீண்டும் ஒரு இனஅழிப்பை சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் துணையுடன் தூண்டும் அளவுக்கு நிலைமை மோசமாகி கொண்டு செல்கிறது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி அவர்கள், இந்தோ பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்திகள் அமைச்சர் ஆன்மேரி ட்ரெவல்யான் அவர்களிடம் “பிரித்தானியாவில் பிரிவினைச் சிந்தனையில்லாத புலம்பெயர் தமிழர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் உட்காரத் தயார்”எனக் கூறி யாழ்ப்பாண அரசினதும் வன்னியரசினதும் இறைமைகளைக் கைப்பற்றிய அரசு என்ற வகையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமையையும் தேசியத்தையும் தன்னாட்சியையும் உறுதிப்படுத்துமாறு பிரித்தானிய அரசிடம் பிரித்தானியத் தமிழர்கள் கோருவதைப் பிரிவினை சிந்தனையாளர்கள் எனச் சுட்டுவதன் மூலம் சிங்களவர்களின் ஈழத்தமிழின அழிப்பை நியாயப்படுத்தி ஈழத்தமிழரை அவர்களின் தேசஇனத்தன்மையில் சமத்துவமாகக் கருதாது தங்கள் ஆட்சியில் வாழும் ஒரு குழுமமாக உலகுக்குக் காட்ட முற்பட்டுள்ளார். இந்நிலையில் அனைத்துலக விசாரணைகள் மூலமான தலையீடுகளே ஈழத்தமிழர்களின் இறைமைப் பாதுகாப்புக்கும் வாழ்வியல் அமைதிக்கும் தேவை. ஆனால் ஈழத்தமிழர்க்கு நீதி வழங்கும் அனைத்துலக விசாரணைகள் எதுவும் வேண்டாம் உள்ளூர் பொறிமுறைகள் மூலமே 2009 சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கு நீதி பெறத் தாம் விரும்புவதாகக் கூறி ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் அனைத்துலக நீதி விசாரணையைப் பெற இயலாதவாறு தடுத்து நிறுத்தி ஈழத்தமிழின அழிப்புச் செய்த ராசபக்ச குடும்பத்தையும் அவர்களின் ஆணையில் ஈழத்தமிழின அழிப்புச் செய்த சிறிலங்காப்படையினரையும் அனைத்தலக விசாரணையில் இருந்து காப்பாற்றினார். இவ்வாறான பல செயற்பாடுகளைச் சம்பந்தர் தன்னிச்சையாகச் செய்து திருகோணமலை மாவட்டத்தில் ஈழத்தமிழரின் இறைமை இழப்பைச் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுப்பதற்குப் பக்கத்துணையாகவும் உள்ளார். இவற்றைச் சுட்டிக்காட்டி “இலக்கு” ஆசிரிய தலையங்கம் மூலம் திரு. இரா.சம்பந்தரை பதவி விலகுமாறு கோரி வந்தது. கடந்த வாரத்தில் சிறிலங்காவின் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் அவர்களும் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் திரு.சம்பந்தரின் முதுமையின் இயலாமை காரணமாக அவர் பதவி விலக வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அவர் தனது கோரிக்கைக்குச் சான்றாக இவ்வருடத்தில் 288 பாராளுமன்ற நாட்களில் 39க்கு மட்டுமே திரு. சம்பந்தர் அவர்கள் பங்கேற்றாலும் பாராளுமன்ற உறுப்பினர்க்கான அவரின் சம்பளமாக 4 மில்லியன் ரூபாவையும் மற்றும் தொடர்புசாதனங்கள் போக்குவரத்து தொகையாக 4 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாயையும் பெற்ற போதிலும் அவரால் செய்யப்பட வேண்டிய பல முக்கிய செயற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் குற்றமும் சுமத்தியுள்ளார். உண்மையில் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து திரு. இரா.சம்பந்தன் விலகினாலே திருகோணமலையில் ஈழத்தமிழர்களின் இறைமையினை புதிய உறுப்பினர் மூலம் பாதுகாக்க முடியும் என்பது இலக்கின் உறுதியான எண்ணமாகவுள்ளது.

Exit mobile version