இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அவரால் மட்டும் நடத்தப்படுகிறதா? அல்லது வேறு எவரும் பின்னல் இருந்து இயக்குகிறார்களா என எனக்கு புரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நேற்று(11) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஒரு புறம் முன்பு தடை செய்யப்பட்டு இருந்ததாக கூறப்பட்ட புலம் பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புகள் தடை நீக்கம் செய்யப்பட்டு, நாட்டுக்குள் அழைத்து வரப்படுகிறார்கள். Global Tamil Forum என்ற உலக தமிழர் பேரவை அங்கத்தவர்களுடன் ரணில் பேசுகிறார். படம் பிடித்து கொள்கிறார்.
ஆனால், உள்நாட்டில் நாட்டின் தலைநகரில் தமிழர் வீடுகள் குறி வைக்கப்பட்டு, சிங்கள மொழியிலான பொலிஸ் பதிவு படிவங்களை ஸ்ரீலங்கா பொலீசார் வீடு வீடாக விநியோகம் செய்கிறார்கள்.
“இந்த படிவங்கள் சிங்கள மொழியில் மாத்திரம் இல்லை. இருமொழிகளிலும் இருக்கிறது. தமிழர் வீடுகள் மட்டும் அல்ல, சிங்கள, முஸ்லிம் என அனைவரது வீடுகளுக்கும் படிவங்கள் விநியோகிக படுகின்றன” என ஸ்ரீலங்கா பொலீஸ் அமைச்சர் டிரான் அலஸ் எனக்கு நேரடியாக இன்று பாராளுமன்றத்தில் பதில் அளித்தார்.
“உங்கள் இனம் என்ன?” என கேட்கிறோம். ஆனால், “உங்கள் மதம் என்ன?” என கேட்கவில்லை என எனக்கு ஸ்ரீலங்கா பொலீஸ் அமைச்சர் டிரான் அலஸ் கூறுகிறார்.
கொழும்பில் விநியோகிக்கப்படும் படிவம் என் கைவசம் இருக்கிறது. “உங்கள் மதம் என்ன?” என்ற கேள்வியும் அங்கே இருக்கிறது. அதுவும் சிங்கள மொழியில் மாத்திரம் விநியோகிக்கப்படும் படிவமாக இருக்கிறது.
கொழும்பில் இருந்து “தப்பி போகும் குற்றவாளிகள்” பதுளையில் இருந்தால் அவர்களையும், வெளியூரில் இருந்து கொழும்புக்கு “தப்பி வரும் குற்றவாளிகளை” கொழும்பிலும் தேடும் பணிகளை ஸ்ரீலங்கா பொலீசார் செய்வதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஸ்ரீலங்கா பொலீஸ் அமைச்சர் டிரான் அலஸ் எனக்கு நேரடியாக இன்று பாராளுமன்றத்தில் பதில் அளித்தார்.
அதாவது, கொழும்பு, பதுளை உட்பட நாடு முழுக்க இந்த படிவங்கள் மற்றும் இந்த பதிவுகள் நடைபெறுவதாக ஸ்ரீலங்கா பொலீஸ் அமைச்சர் டிரான் அலஸ் எனக்கு கூறுகிறார். அதேவேளை 90 விகிதம் பதிவுகள் நிறைவு செய்யப்பட்டு விட்டதாக இந்த ஸ்ரீலங்கா பொலீஸ் அமைச்சர் டிரான் அலஸ் எனக்கு கூறுகிறார்.
ஆகவே, இருமொழிகளிலும் படிவங்கள் உள்ளன. அங்கே “உங்கள் மதம் என்ன?” என்ற கேள்வி கிடையாது. கொழும்பு, பதுளை உட்பட நாடு முழுக்க, ஸ்ரீலங்கா பொலீஸ் இந்த பதிவுகளை செய்கிறது என இந்த ஸ்ரீலங்கா பொலீஸ் அமைச்சர் டிரான் அலஸ் எனக்கு கூறுகிறார்.
இவை அனைத்தும் பச்சை பொய்.
சிங்கள மொழியில் மாத்திரம் படிவங்கள், தலைநகரில் தமிழர் வீடுகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் “உங்கள் மதம் என்ன?” என்ற கேள்வி இருக்கிறது. நாடு முழுக்க, 24 நிர்வாக மாவட்டங்களிலும் இத்தகைய நடைமுறைகள் நடைபெறவில்லை.
ஸ்ரீலங்கா பொலீஸ் அமைச்சர் டிரான் அலஸ், வேறு எவரிடமும் இத்தகைய பொய்களை சொல்ல வேண்டும். என்னிடம் சொல்லி மாட்டிக்கொண்டுள்ளார்.
நான் 2006 முதல் 2009 வரை நடைபெற்ற இறுதி யுத்த காலத்தில் கொழும்பில் நடைபெற்ற அரச பயங்கரவாத வெள்ளை வேன் கடத்தலுக்கே முகம் கொடுத்தவன். உயிர் அச்சுறுதல்களுக்கு பயந்து ஓடி ஒளியாமல் கொழும்பில் நின்று போராடிவன்.
இத்தகைய பொய்களை இவரும், இவரது அரசாங்கமும் பாராளுமன்றம் வந்து அங்கே “தேங்காய் திருவும்” எம்பிகளிடம் சொல்லி இருக்க வேண்டும்.