Home செய்திகள் தண்ணிமுறிப்பு கிராமத்தில் விவசாய நடவடிக்கைக்கு பௌத்த மதகுரு தலைமையினால குழு தடை

தண்ணிமுறிப்பு கிராமத்தில் விவசாய நடவடிக்கைக்கு பௌத்த மதகுரு தலைமையினால குழு தடை

தண்ணிமுறிப்பு கிராம மக்களின் விவசாய நடவடிக்கைக்கு பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்களம் தடை விதித்துள்ளதோடு குருந்தூர் மலை பௌத்த புராதன பூமி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை துப்பரவு செய்து எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கோடு வேலைகளில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவரை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்தி பொலிஸார் மற்றும் வன வள திணைக்களத்தினரை ஏவி விட்டு வேலைகளுக்கு தடைவிதித்த சம்பவம் நேற்று மாலை (27)இடம்பெற்றுள்ளது.
IMG 6759 தண்ணிமுறிப்பு கிராமத்தில் விவசாய நடவடிக்கைக்கு பௌத்த மதகுரு தலைமையினால குழு தடை
தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் குமுளமுனை தண்ணிமுறிப்பு குள வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பேரானந்தம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தினை துப்பரவு செய்து டோசர் இயந்திரம் மூலம் காணியை சமப்படுத்தும் வேலைகளில் குறித்த காணி உரிமையாளர் நேற்றையதினம் ஈடுபட்டிருந்தவேளை அவ்விடத்துக்கு வருகைதந்த பௌத்த மதகுரு ஒருவர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இவ்விடம் அனைத்தும் குருந்தூர்மலைக்கு சொந்தமான தொல்லியல் புராதன பூமி என தெரிவித்துள்ளனர்.
அத்தோடு 500 ஏக்கர் நிலங்கள் புராதன பூமி, இங்கு எந்த வேலைகளிலும் ஈடுபடமுடியாது இங்கு எவருக்கும் நிலங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு காவல் நிலையத்தினர் மற்றும் வன திணைக்களத்தினரை அழைத்து காணி உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதோடு காணியை மேற்கொண்டு துப்பரவு செய்யமுடியாது என தெரிவித்து தடை விதித்து சென்றுள்ளதோடு காணி உரிமையாளரை முல்லைத்தீவு காவல் நிலையத்துக்கு வருகைதருமாறு தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பத்திரிகையாளர்களை தொடர்புகொண்ட கிராம மக்கள் குறித்த விடயம் தொடர்பாக தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அங்கு செய்தி அறிக்கையிடலுக்கு சென்ற பத்திரிகையாளர் ஒருவரின் ஊடக அடையாள அட்டையை வாங்கிய காவல்துறையினர் அதிலுள்ள விபரங்களை பதிவு செய்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசம் தமிழ் மக்கள் பல ஆண்டு காலமாக குடியிருந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட தண்ணிமுறிப்பு கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த பிரதேசம்.
போருக்கு பின்னர் மீண்டும் தற்போது அப்பகுதியில் உள்ள தமது காணிகளை துப்பரவு செய்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த காணிகளில் வேலிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே கிளிசறியா மரங்கள் நடப்பட்டு எல்லைகள் இடப்பட்டுள்ளது.
மக்களின் காணிகளில் மா ,பலா , தென்னை , போன்ற மரங்கள் கூட இன்றும் நிற்பதை காணமுடிகின்றது. இந்த நிலையில் கடந்த மாதம் 18 ஆம் திகதியிலிருந்து குருந்தூர் மலையில் இராணுவம் , தொல்லியல் திணைக்களம் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
தற்போது அதனை அண்டிய தமிழ் மக்களுக்கு சொந்தமான குடியிருந்த நிலங்கள், விவசாய நிலங்கள் என்பனவற்றை அபகரிக்கும் நோக்கமாக இன்று இந்த நடவடிக்கையில் பௌத்த தேரர் தலைமையிலானோர் ஈடுபட்டுள்ளமை கிராம மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
Exit mobile version