Home ஆய்வுகள் எமது பாரம்பரிய நிலத்தை நாம் ஏன் இழக்க வேண்டும்?தமது நிலங்களுக்காக போராடும் தமிழ் பெண்கள்

எமது பாரம்பரிய நிலத்தை நாம் ஏன் இழக்க வேண்டும்?தமது நிலங்களுக்காக போராடும் தமிழ் பெண்கள்

பாடசாலை ஆசிரியையான சந்திரலீலா ஜெசிந்தனின் குடும்பம் போரின் இறுதி நாட்களில் வீட்டில் இருந்து சிறீலங்கா படையிரால் வெளியேற்றப்பட்டிருந்தனர். அதன் பின்னர் கடந்த பத்து வருடமாக அவர்களின் நிலத்தில் சிறீலங்கா படையினர் தங்கியுள்ளனர்.

கடந்த 3 வருடங்களாக திருமதி ஜெசிந்தனுடன் இணைந்து பல டசின் பெண்கள் கேப்பாபிலவில் உள்ள தமது பாரம்பரிய நிலங்களை மீட்பதற்கான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். சிறீலங்காவின் வரலாற்றில் இது மிக நீண்ட போராட்டமாகும்.

இந்த போராட்டத்தில் பங்கெடுக்க ஆண்களுக்கு விரும்பம் இருந்தாலும் படையினரின் அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.  ஆனால் நாங்கள் பெண்கள் இது எமது நிலம், அதுவே எங்களின் பாதுகாப்பு, இது எங்களின் உரிமை எனவே நாம் அதற்காக போராடாது விட்டால் யார் போராடுவார்கள் என 43 வயதான திருமதி ஜெசிந்தன் தெரிவித்துள்ளார்.

நாம் போரில் எல்லாவற்றையும் இழந்து விட்டோம், ஏன் நாம் பாரம்பரியமாக வாழ்ந்த நிலத்தையும் இழக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சிறீலங்காவில் 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையில் இடம் பெற்ற போரில் பல பத்தாயிரம் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.

பல மக்கள் தமது நிலங்களை மீளப் பெற்ற போதும், கேப்பாபிலவில் உள்ள 350 ஏக்கர் நிலம் தற்போதும் படையினர் வசம் உள்ளதாக நில உரிமைக்கான மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் காணிகள் அனைத்தும் மீண்டும் ஒப்படைக்கப்படும் என சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா தெரிவித்திருந்தார். ஆனால் அவர் அதனை நிறைவேற்றவில்லை.434734f2ddf8461cb909a6343295a4ca 18 எமது பாரம்பரிய நிலத்தை நாம் ஏன் இழக்க வேண்டும்?தமது நிலங்களுக்காக போராடும் தமிழ் பெண்கள்

85 விகிதமான நிலங்களை கையளித்துள்ளதாகவும், மீதமுள்ள நிலங்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும் சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு போரின் போது தனது நிலத்தில் இருந்து வெளியேறிய செல்லம்மா சிங்கரட்ணம்(87) நிலத்தை மீட்பதற்காக உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். மூன்று வருடங்கள் இடம் பெயர்ந்தோர் முகாமில் இருந்த பின்னர் அவரின் குடும்பம் வீட்டுக்கு திரும்பிய போது அவரினதும், அவரின் மகளினதும் வீடுகள் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தன.

போராட்டத்தின் பின்னர் இராணுவம் வீட்டை கையளிக்க முன்வந்தது, ஆனால் அவரின் வீடு பலத்த சேதமடைந்துள்ளது. வீட்டை திருத்துவதற்கு எம்மிடம் பணமில்லை என தனது வீட்டுக்கு வெளியில் அமர்திருந்தவாறு அவர் தெரிவித்தார்.

சிறீலங்காவில் காணப்படும் ஊழல்கள், இயங்காத நீதித்துறை, வெளிப்படையற்ற தன்மை, பொறுப்புக் கூறலற்ற தன்மை என்பன நில உரிமையாளர்களின் நிலையை மோசமாக்கி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போரின் போது சிறுபான்மை தமிழ் மக்கள் வடக்கிலும், கிழக்கிலும் இருந்து பல தடவைகள் துரத்தப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் நிலங்களைக் கைப்பற்றிய படையினர் அங்கு முகாம்களையும், உயர் பாதுகாப்பு வலையங்களையும் அமைத்து அதனை மீண்டும் வழங்க மறுக்கின்றனர்.

காணிகள் வழங்கப்பட்டாலும் அதனை துப்பரவு செய்வதற்கான உதவிகள் வழங்கப்படுவதில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது 2018ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சில நிலங்களை படையினர் விவசாயத்திற்கும், சுற்றுலாத் துறைக்கும் பயன்படுத்தி வருகின்றனர். போரின் போது பல பத்தாயிரம் தமிழ் மக்கள் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்களை மீளக்குடியமர்த்தும் பணிகளை ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு 2011 ஆம் ஆண்டு மேற்கொண்டிருந்தது. அதன் பயனாக 8,529 மக்கள் மீண்டும் திரும்பியதாக அதன் வதிவிடப் பிரதிநிதி மெனிக் அமரசிங்கா தெரிவித்துள்ளார்.

மேலும் 100,000 தமிழ் மக்கள் தமிழகத்தில் தங்கியுள்ளனர். ஆனால் திரும்பியவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு காணிகள் இல்லை. 30,000 தமிழ் மக்கள் தற்போதும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நிலையில் தான் வாழ்கின்றனர். அவர்கள் தமது வீடுகளையும் நிலங்களையும் இழந்தவர்கள்.

நிலங்களை கையகப்படுத்துவது அமைதியை உருவாக்காது, அது வன்முறையானது. மக்களின் உரிமைகளை வழங்க வேண்டும், அவர்களின் சுதந்திர நடமாட்டத்தை அனுமதிக்க வேண்டும் என கொழும்பைத் தளமாகக் கொண்ட மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் தெரிவித்துள்ளது.

நிலமே சிறீலங்காவில் உள்ள மக்களின் சொத்தும், அடையாளமும் என மையத்தின் ஆய்வாளர் பவானி பொன்சேகா தெரிவித்துள்ளார். நிலங்களை மீள ஒப்படைப்பதே நீண்ட காலத்தில் அமைதியை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துளார்.

நாடு திரும்பும் மக்களுக்கு சிறிய அளவிலான நிலங்களை வழங்குவதாக சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கும் நீண்ட காலம் காத்திருக்க வேண்யுள்ளது.

1992ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த 100 தமிழ் மக்கள் கடந்த ஆண்டு இரணைதீவில் மீண்டும் குடியேறியுள்ளனர். இதுவரை காலமும் அவர்கள் அங்கு மீன்பிடிப்பதற்கும் தேங்காய்கள் பறிப்பதற்குமே சென்று வந்தனர். 2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் அவர்கள் அங்கு சென்ற போதும், கேந்திர முக்கியத்துவமான பகுதி எனக் கூறி சிறீலங்கா கடற்படையினர் அவர்களை அனுமதிக்கவில்லை.

பெருமளவான மனுக்கள் சமர்ப்பித்து, பெண்கள் குறிப்பாக கணவரை இழந்த பெண்கள் தமது வாழ்வாதாரமே இந்த நிலம் தான் என தெரிவித்து 2018ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒரு வருட போராட்டத்தின் பின்னரே தமது நிலங்களை மீண்டும் பெற்றுள்ளனர். அங்குள்ள கத்தோலிக்க தேவாலயம் அதற்கான உதவிகளை வழங்கியிருந்தது. எனினும் கடற்படையினர் சிறிய அளவிலான நிலப்பகுதியை தற்போதும் தம்வசம் வைத்துள்ளனர்.

ஆனாலும் அதனையும் மீட்பதற்காக தாம் போராடி வருவதாக போராட்டத்தை வழிநடத்தும் மரியா ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

ஆனால் கேப்பாபிலவில் போராட்டம் மேற்கொண்டு வரும் திருமதி ஜெசிந்தனை சிறீலங்கா படையினர் பல தடவைகள் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவரின் கணவர் இறந்த மறுநாளும் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

தனக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாகவும், தனது வீட்டில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கணவரை இழந்த நான் இராணுவத்தை எதிர்த்து போராடுவது கடினமானது, ஆனால் எமக்கு இந்த நிலம் மட்டுமே உள்ளது. எனவே அதனை பெறும் வரை தொடர்ந்து போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி: அல்ஜசீரா

 

 

Exit mobile version