தாஸ்
தாயக மேம்பாடு: திருகோணமலை மாவட்ட வளங்களும் நீர்நிலைகளும் – திருகோணமலை மாவட்டமானது, இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மிகவும் முக்கியமான மாவட்டமாகும். உள்நாட்டு உற்பத்தியில் மிகவும் முக்கியமான மாவட்டமாகும். பல்வேறு இயற்கை வளங்களும் மற்றும் செயற்கை வளங்களும் உள்ள மாவட்டம் ஆகும்.
கந்தளாய் குளம், அல்லை குளம், பன்குளம், வெண்டரசன் குளம் போன்றவை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மிகவும் பெரிய குளங்களாகும்.
பிரீமா சிலோன் மா உற்பத்தி, டோக்கியோ சிமென்ட் போன்ற சர்வதேச நிறுவனங்கள் மிகவும் பாரிய அளவில் இங்கு செயற்படுவதுடன், மேலும் பல சர்வதேச நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.
திருகோணமலைத் துறைமுகம் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்துள்ளது. உலகிலுள்ள பல துறைமுகங்களை இணைக்கும் முக்கியமான கடல்வழிப் பாதையில் திருகோணமலைத் துறைமுகம் அமைந்துள்ளது. மூன்று பக்கம் மலைகளாலும், ஒரு பக்கம் கடலாலும் சூழப்பட்டு பாதுகாப்பாகத் திருகோணமலைத் துறைமுகம் காணப்படுகின்றது.
நிலாவெளி கடற்கரையின் 15 நிமிட பயண தூரத்தில் புறாத்தீவு காணப்படுகின்றது. இது உல்லாசப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபல்யமான இடமாகும்.
இராவணனால் கட்டப்பட்ட திருக்கோணேஸ்வரம் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாக இம்மாவட்டத்தில் உள்ளது. கிண்ணியாவில் கிறிஸ்தவ ஆலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள் உள்ளதுடன், திரியாய் விகாரை, வெல்கம் விகாரை போன்றவை திருகோணமலையில் காணப்படுகின்றன.
திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்த வரையில், 11 பிரதேச செயலாளர் பிரிவு களையும், 250 கிராம சேவகர் பிரிவுகளையும், 657 கிராமங்களையும் கொண்டுள்ளது. 4,40,718 மக்களைக் கொண்டுள்ளது.
திருகோணமலை மாவட்டமானது, 1,34,357 தமிழர்களையும், 1,89,205 முஸ்லிம் மக்களையும், 1,15,732 சிங்கள மக்களையும், 1427 ஏனைய இன மக்களையும் உடைய மாவட்டமாகும்.
உல்லாசப் பயணத்துறை வேகமாக வளர்ந்து வரும் மாவட்டத்தில் முதன்மையானது திருகோணமலை மாவட்டம் ஆகும்
இவ்வளவு வளங்கள் கொண்டுள்ள திருகோணமலை மாவட்டத்தின் வளங்கள் யாவும் இன்று அழிவடைந்து செல்கின்றன. இதனைப் பாதுகாக்க வேண்டும். மக்கள் இம் மண்ணின் வளங்களைப் பயன்படுத்த முடியாத நிலை இன்று காணப்படுகின்றது.
மக்களின் வாழ்வாதாரம் மிகவும் வறுமையில் உள்ளது. மீன்வளம் அதிகமாக இருந்தபோதிலும், திருகோணமலை மாவட்ட மக்கள் இதனை முழுமையாகப் பயன்படுத்த முடியாதுள்ளது. வாழ்வாதாரத் திட்டங்கள் அதிகம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எமது உறவுகள் இதற்காக முன்வர வேண்டும் என்பதே திருகோணமலை மக்களின் விருப்பமாக உள்ளது.