கியூபாவில் நெடுங் காலத்துக்குப் பின்(Communist) கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த மிகப் பெரிய போராட்டத்தில் பங்கேற்ற பலர் கைது செய்யப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதாரச் சரிவு, உணவு மற்றும் மருந்துகள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியவை காரணமாக மக்கள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.
இப்போது கொரோனாவை கையாண்ட விதமும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கியூபாவில் அரசுக்கு எதிராகப் பேசுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்பதால் அங்கு நடந்திருக்கும் போராட்டங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
போராட்டங்களுக்கு எதிராகச் சண்டையிடும்படி கியூபாவின் அதிபர் தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
“சர்வாதிகாரம் ஒழியட்டும்”, “விடுதலை வேண்டும்” போன்ற முழக்கங்கள் இந்த போராட்டத்தின் போது எழுப்பப்பட்டன. “எங்களுக்குப் பயமில்லை. எங்களுக்கு மாற்றம் தேவை. சர்வாதிகாரம் இனி எங்களுக்கு வேண்டாம்” என போராட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களுக்கு சீரூடையில்லாத அதிகாரிகள் பலர் உதவி செய்தனர் என Reuters செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.