உயிரினங்களைப் பாதுகாக்க அணிதிரள வேண்டும்
உலகில் உள்ள தாவரங்களையும், விலங்குகளையும் பாதுகாக்கும் நோக்கில் உலக காட்டு உயிரினம் தொடர்பான நாள் ஒவ்வொரு வருடமும் மார்ச் 3 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.
இந்த நாள் தொடர்பான பரிந்துரையை தாய்லாந்து அரசே முதலில் முன்வைத்திருந்தது. அதன் பின்னர் அதன் முக்கியத்துவம் கருதி, ஐக்கிய நாடுகள் சபையானது தனது 68 ஆவது பொதுக் கூட்டத் தொடரில் 2013 ஆம் ஆண்டு அதனை ஏற்றுக் கொண்டு அறிவித்திருந்தது.
இந்த நாளில் நாம் எவ்வாறு காட்டு வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பது (Convention on International Trade In Endangered Species of Wild Fauna and Flora) மற்றும் அவற்றை எவ்வாறு அழிவில் இருந்து மீட்டு எடுப்பது போன்ற விடயங்கள் முக்கியமாக பேசப்படுவதுண்டு. உயிரினங்களை எவ்வாறு பாதுகாத்தல் என்பது தொடர்பில் மக்களுக்கு கற்பிப்பதற்கும், அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் மிகவும் முக்கியமானது.
பல மருத்துவப் பொருட்கள் தாவரங்களிலும், விலங்குகளிலும், நுண்ணங்கிகளிலும் இருந்து அறியப்பட்டு, பின்னர் ஆய்வுகூடங்களில் தயாரிக்கப்படுகின்றன. முதலில் கண்டறியப்பட்ட பென்சிலின் என்ற கிருமி கொல்லி Fungus என்னும் நுண்ணங்கியில் இருந்து அறியப்பட்டது. அஸ்பிரின் என்ற வலி நீக்கியும் Willow tree எனப்படும் மரத்தில் இருந்து பெறப்பட்டதே. தமிழ் பாரம்பரிய மருத்துவத்துறையிலும் பெருமளவான மருந்துப்பொருட்களின் உறைவிடம் தாவரங்களும் விலங்குகளுமே.
தற்போதைய உலக ஒழுங்கில் சனத்தொகை அதிகரிப்பு, அவர்களின் வாழ்க்கைத்தர அதிகரிப்பு என்பன ஏனைய உயிரினங்களுக்கான வாழ்விடம், உணவு, மற்றும் ஏனைய தேவைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. அதேபோல எமது நவீன வாழ்க்கை முறைகளினாலும், அதிக மக்கள் தொகையினாலும் ஏற்படுத்தப்படும் சூழல் மாசுபடுதலானதும், உலகம் வெப்பமயமாதலும் பல உயிரினங்களை அழிவு நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளில் இந்த தினம் கொண்டாடப்படுவதுண்டு. 2018 ஆம் ஆண்டு உலகில் உள்ள சிங்கம் மற்றும் புலி (Big Cats: Predators Under Threat) இனங்களை பாதுகாத்தல் என்ற திட்டம் முன்வைக்கப் பட்டிருந்தது. 2019 ஆம் ஆண்டு கடலில் வாழும் உயிரினங்கள் தொடர்பான (Life Below Water: For People and the Planet) சிந்தனை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த வருடம், சூழலில் அழிவு நிலையில் உள்ள முக்கியமான உயிரினங்களை மீட்டு எடுத்தல் (‘Recovering key species for ecosystem restoration) என்ற கருப்பொருள் முன்வைக்கப் பட்டுள்ளது.
பறவைகள், ஊர்வன, பாலூட்டிகள், மீன்கள், பூச்சிகள் போன்ற இனங்களைச் சேர்ந்த விலங்குகளில் 68 விகிதமானவை கடந்த 1970 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது முற்றாக அழிந்து விட்டதாக 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பூமியில் வாழும் உயிரினங்கள் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 50 வருடங்களில் தற்போது உள்ள உயிரினங்களில் 25 விகிதமானவை முற்றாக அழிந்துவிடும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
எமது பூமி தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்துவதால், இதனை நாம் கொண்டாடுவது அவசியம். ஆனால் எவ்வாறு கொண்டாடுவது?
அடுத்த தலைமுறையினருக்கு இது தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதே முக்கியமானது. சிறுவர்களுக்கு இது தொடர்பில் தகவல்களை வழங்கலாம்; பாடசாலைகளில் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இந்த உயிரினங்களில் நாம் தங்கி வாழுகின்றோம் என்ற கருத்தை அவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும்.
இதற்கான தீர்வு என்ன?
நாம் இந்தப் பூமிக்கும், நாம் வாழும் சூழலுக்கும் அதிக சேதங்களை ஏற்படுத்தாமல் வாழ வேண்டும். சூழலைப் பாதுகாக்குமாறு அரசுகளுக்கும், நாடுகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். நாம் அனைவரும் அதற்காக இணைந்து பணியாற்ற வேண்டும்.
இந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்?
காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் கட்டுரைகளை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏனைய மக்களுக்கும் பகிரலாம். இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தலாம் (You can use the hashtags #WorldWildlifeDay and #DoOneThingToday to join in with the global conversation).
எதனை நாம் செய்தாலும், நாம் தனியாகச் செய்யப்போவதில்லை. இந்த உலகில் உள்ள மக்களில் மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் எம்முடன் இணைந்து பணியாற்றுவார்கள்.
- இருளில் மூழ்கியுள்ள இலங்கை! காப்பாற்ற முன்வருமா இந்தியா? | அகிலன்
- என்ர பிள்ளை அம்மாவைத் தேடி வருவான்: கடைசிக் காலத்தில் தன் மகனுக்காக தனிமையில் போராடிக் கொண்டிருக்கும் தாய் | பாலநாதன் சதீஸ்
- மக்களின் பொருளாதார உரிமைசார் விடயங்கள் பாதுகாக்கப்பட, அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒரே மேடையில் அமர வேண்டும் | அருட்தந்தை மா.சத்திவேல்