Tamil News
Home செய்திகள் பெரமுன உறுப்பினரையே தேர்தலில் களமிறக்குவோம் – மகிந்த உறுதி

பெரமுன உறுப்பினரையே தேர்தலில் களமிறக்குவோம் – மகிந்த உறுதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இயலுமானவரை ஒன்றிணைந்து செயற்படுவோம். முடியாவிடின் விலகிவிடுவோம். பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை களமிறக்கவே தீர்மானித்துள்ளோம். உத்தியோகபூர்வ அறிவிப்பை வெகுவிரைவில் வெளியிடுவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வருமாறு பதிலளித்தார்.

கேள்வி – புதிய அரசியல் கூட்டணிகள் ஸ்தாபிக்கப்படுகிறது,கூட்டணி தொடர்பில் நீங்கள் அவதானம் செலுத்தவில்லையா ?

பதில் – புதிய அரசியல் கூட்டணி குறித்து பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்
வெகுவிரைவில் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணிஅமைக்கப்படும்.

கேள்வி – உங்களின் தாய் கட்சியான சுதந்திரக் கட்சி தீ பற்றி எரிகிறதே, பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீங்கள் ஆலோசனை வழங்க போவதில்லையா?

பதில் -சந்திரிக்கா அம்மணி வந்து தலைவர் மைத்திரியை விரட்டியடித்துள்ளார். தவறுகள் தற்போது திருத்திக் கொள்ளப்படுகின்றன. சுதந்திர கட்சி பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. சுதந்திர கட்சியை கட்டியெழுப்பும் உரிமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு உண்டு.

கேள்வி – குறுகிய காலத்தில் பொதுஜன பெரமுன எழுச்சிப் பெற்றதை போன்று சுதந்திர கட்சியும் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கின்றீர்களா ?

பதில் – நிச்சயமாக சுதந்திர கட்சி மீண்டும் எழுச்சிப்பெறும்.

கேள்வி – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது ஜன பெரமுனவுடன் இணக்கமாக செயற்படுகிறாரா ?

பதில்- இணக்கமாக செயற்படும் வரை இணைந்து பயணிப்போம் முடியாவிடின் விலகி விடுவோம்.

கேள்வி – பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க போவதில்லை என ஆளும் தரப்பின் உறுப்பினர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகிறாரே?

பதில் – அது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு. கட்சியின் உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.

Exit mobile version