மக்களின் பணத்தை அபகரிப்பது அவமானம்
அமெரிக்காவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆப்கான் சொத்துகளை கையகப்படுத்துகின்ற முற்றிலும் நியாயமற்ற முடிவை அந்த நாடு மீளப்பெறத் தவறும் பட்சத்தில், அமெரிக்கா தொடர்பான தங்கள் கொள்கையை தாம் மீளாய்வு செய்ய வேண்டியிருக்கும் என்று ஆப்கானிலுள்ள தலிபான் அமைப்பு கடந்த திங்கட்கிழமை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அமெரிக்காவில் வைப்பில் வைக்கப் பட்டிருக்கின்ற 7 பில்லியன் அமெரிக்க நிதியை, அமெரிக்கா தான் விரும்பிய வழியில் பகிர்ந்தளிப் பதற்கான ஒரு நிறைவேற்றக் கட்டளையில் கடந்த வெள்ளிக்கிழமை பைடன் ஒப்பமிட்டார்.
இந்த சொத்துக்களில் அரைவாசி செப்டெம்பர் 11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவிருக்கிறது. மற்றைய பகுதி ஆப்கான் மக்களின் நலனைக் கவனிப்பதற்கான ஒரு அறக்கட்டளைக்கு வழங்கப்படவிருக்கிறது. அமெரிக்காவின் மேற்குறிப்பிட்ட முடிவு ஆப்கான் மக்களை வெகுண்டெழச் செய்தது மட்டுமன்றி, பன்னாட்டுச் சமூகத்தினர் மட்டிலும் கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்திருக்கிறது.
பணத்தை முடக்குவது என்றாலும் சரி, அல்லது பகிர்ந்தளிப்பது என்றாலும் சரி, தனது உள்நாட்டுச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏனைய நாடுகளின் சொத்துகளை தாம் விரும்பியபடி கையாள்வதற்கு அமெரிக்காவுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. இவ்வாறான செயற்பாட்டுக்கு எந்தவிதமான சட்டபூர்வமான நியாயமோ அன்றேல் அறநெறி ரீதியிலான நியாயமோ இல்லை. மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானின் சொத்துகளை வெளிப்படையாகக் கொள்ளை யடிக்கின்ற அமெரிக்காவின் காட்டுமிராண்டித் தனமான செயற்பாடு 2022ம் ஆண்டிலே நடப்பது என்பது துளியளவும் சிந்தித்துப் பார்க்க முடியாத ஒரு விடயமாகும். அமெரிக்காவின் கையில் இருக்கின்ற இந்த நிதிசார்ந்த ஏகபோகம் மிகவும் ஆபத்தானதும் அதே வேளையில் உலகில் உறுதியற்ற தன்மையை உருவாக்கவும் வல்லது என்பதுடன் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டியதொன்றும் ஆகும்.
அமெரிக்காவைப் பொறுத்த வரையில் 7பில்லியன் டொலர்கள் ஒரு பெரிய விடயமாக இருக்க முடியாது. இந்த நிதியைக் கொண்டு மூன்று பி-2 ரக குண்டு வீச்சு விமானங்களை அதனால் கொள்வனவு செய்ய முடியும். ஆனால் ஆப்கான் மக்களைப் பொறுத்த வரையில் இந்த நிதி அவர்களது உயிர்களைக் காப்பது தொடர்பானது. வெளிநாடுகளில் வைக்கப்பட்டிருக்கும் ஆப்கான் சொத்துகளை முடக்குவது, ஆப்கான் மக்களை பல தலைமுறைகள் பின்னோக்கிக் கொண்டு செல்லும் என்று ஆப்கானுக்கான ஐநாவின் விசேட பிரதிநித டேபொறா லியோன்ஸ் (Deborah Lyons) எச்சரிக்கை விடுத்தார்.
‘ஆப்கான் மக்களின் உயிர்களும் உயிர்கள் தான்’ என்பதை உணர்வதற்குரிய அடிப்படை மனிதாபிமானம் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு இருக்குமாயின், தாம் நிச்சயமாக உயிர்பிழைப்போம் என்று நம்புகின்ற ஆப்கான் மக்களின் நம்பிக்கையை அவர்கள் பறிக்கக்கூடாது. குறிப்பாக ஆப்கான் நெருக்கடியைத் தோற்றுவித்தவர்கள் என்ற வகையில், தற்போதைய சூழலில் ஆப்கான் மக்களுக்கு உதவவேண்டிய தார்மீகக் கடமை அமெரிக்காவுக்கு நிச்சயமாக இருக்கிறது. ஆப்கானில் முன்னெடுக்கப்பட்ட போரின் போது, 30,000 அப்பாவிப் பொதுமக்கள் அமெரிக்க இராணுவத்தால் அங்கு கொல்லப்பட்டதுடன், 11 மில்லியன் மக்கள் அகதிகள் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டார்கள். ஆப்கானிலே போரிலே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈட்டை வழங்குவதற்காக தனது 700 பில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்புப் பாதீட்டின் ஒரு பகுதியை வழங்கினாலென்ன என்று கேட்கத் தோன்றுகிறது.
ஆப்கான் மக்களின் உயிர்காக்கும் சொத்துகளை திருப்பிக் கொடுக்காமல் வைத்திருப்பதற்காக சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்காவைக் கண்டித்திருக்கும் அதே வேளை மனித உரிமைகள் தொடர்பாக அதிகம் மார்தட்டுகின்ற மேற்குலக நாடுகளோ இவ்விடயம் தொடர்பாக அமைதி காக்கின்றன. ஆப்கான் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை இன்னும் அதிகமாக்கி, சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட பன்னாட்டு ஒழுங்கு என்பது பலவீமானவர்களையும் நீதியின்படி ஒழுகுகின்றவர்களையும் பாதுகாப்பதற்கல்ல, மாறாக, வல்லரசுகளையும் அவற்றின் ஏகபோகங்களையும் பாதுகாப்பதற்கே உருவாக்கப்பட்டவை என்பது வெள்ளிடைமலையாகிறது.
எப்படிப் பார்த்தாலும் இது அமெரிக்கா ஆப்கான் மக்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனாகும் என்பது மட்டுமன்றி என்றோ ஒரு நாள் அமெரிக்கா இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தித் தான் ஆகவேண்டும்.
நன்றி: globaltimes.cn