மாணவர்கள்- கற்பிப்போருக்கான வசதி வாய்ப்பு
சர்வதேசம் இதுவரை எதிர்கொண்ட அனர்த்தங்களுள், இன்று தொடர் எல்லையில்லாத பாரிய அனர்த்தமாக (Global pandemic) கொரோனாத் தாக்கம் இடம் பிடித்துள்ளது. இந்த கொடிய பேரனர்த்தம் ஏற்பட்டு ஒரு வருடமும் பதினொரு மாதங்களும் கடந்துள்ள இவ்வேளையில், உலகில் 225 நாடுகளைச் சேர்ந்த 375 மில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளதுடன் 5.78 மில்லியன் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள் அமெரிக்காவில் 907,190 மரணங்களும், பிறேசிலில் 626,923 மரணங்களும், இந்தியாவில் 495,050 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் சுமார் 610,441 நபர்கள் பாதிக்கப் பட்டுள்ளதோடு, 15420 நபர்களது மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தலுக்காக மூடப்பட்டதோடு, நேரடியான வகுப்பறைக் கல்விக்கும் தடை விதிக்கப்பட்டன. இக் காலத்தில் கற்போருக்கும், கல்விச் சமூகத்திற்கும் இடையிலான பிணைப்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தன. இன்று தரம் இரண்டில் இருக்க வேண்டிய மாணவர்கள் பாடசாலை அறியாத வகையில் பிரித்தொதுக்கப்பட்டனர்.
கொரோனாவால் முற்றாக இருள் சூழ்ந்த ஒரு வருடத்தின் பின் கல்வியின் வீழ்ச்சிக்கு மாற்றுவழி தேடத் தொடங்கிய சமூகம், வகுப்பு முறை அறிவூட்டும் நிகழ்வுகளில் இருந்து விலகி நேரடித் தொலைக் கல்வி முறையை ZOOM போன்ற இணையவழித் தொடர்பு ஊடாக கல்வி அறிவூட்டும் செயற்பாட்டினை ஆரம்பித்தனர். உண்மையில் இது ஒர் மாற்றீடில்லாத ஒரு நல்ல வழிகாட்டல். தொடற்சியாக கற்றலிலும் கற்பித்தலிலும் வலுவிழந்த கல்வித் துறைக்கு இது ஒரு உச்சமான திருப்பு முனையும் கூட. வசதியினையும், வாய்ப்புகளையும் கொண்ட பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் உட்பட கல்விக் கூடங்கள் இச்சந்தர்பங்களை முடியுமானவரை பயன்படுத்திக் கொண்டனர்.
மாணவர்கள் மீது அதித அக்கறை கொண்ட அதிபர்கள் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் வசதி படைத்த பெற்றோர்கள் இருள் சூழ் கால கற்றல் முறைக்கு ஒளியூட்டத் தொடங்கினர். தொடுகை முறை இயக்கப் கையடக்கத் தொலைபேசி வசதி, குறித்த நேரத்திற்குப் போதுமா Data ஆசிரியருக்குத் தேவையான கையடக்கத் தொலைபேசி உட்பட தேவையான அடிப்படை வசதிகள், ZOOM மூலம் மாணவர்களை ஒருங்கிணைதல், இடைநிறுத்தி வினாக்களைத் தொடுத்தல், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கண்காணிப்பு முதலானவை இக்கற்பித்தல் முறைக்கு அவசியமானதாக அமைகின்றது.
விசேடமாக ஆய்வுகூட செயன்முறைக் கற்பித்தலை ZOOM கற்கை ஊடாக மேற் கொள்ளல், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுகும் இடையிலான இடைநிலை பிணைப்பு, ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எழுத்துருவாக்கம், ஆசிரியர்களின் நேரடிக் கண்காணிப்பு முதலானவற்றை பூரணமாக இக்கற்பித்தல் முறை மூலம் எய்த முடியாவிட்டாலும், கற்போருக்கு இவ்வாறான மாற்று வழியற்ற வேளையில் சமூக இடைவெளியைப் பேணி கற்பிப்பதற்கும் கல்விப் பின்புலத்தில் ஏற்படப் போகும் நீண்ட நாள் தளர்வினைக் குறைப்பதற்கும் இவ் இணைய வழியிலான நேரடித் தொலைக்கல்வி முறையுடான கற்பித்தல் முறை ஒரு வரப்பிரசாதமாக அமையலாயிற்று.
- வசதி வாய்ப்புக்கள் குறைந்த மாணவர்களிடையே ZOOM வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளத்தக்க தொடுகை இணைப்பாக்கம் கொண்ட கையடக்கத்தொலைபேசி வசதி இல்லாமை.
- பல கற்போரைக் கொண்ட குடும்பத்தில் ஒரே நேரத்தில் பல கையடக்கத் தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பெற்றோருக்கும் பாதுகாவலருக்கும் முடியாமல் போனமை.
- கையடக்கத் தொலைபேசி வசதி இருந்த போதிலும் இணைப்பு (Net work) துண்டிக்கப்படலும் இல்லாதிருத்தலும்.
- ஆசிரியர்கள் அனைவருக்கும் ZOOM இல் கற்பிக்கக் கூடிய போதிய வசதியும் வாய்ப்பும் முன்னனுபவமும் கிடைக்கப்பெறாமை.
- ஏழை மாணவர்களுக்கும், ஆசிரியர்களில் பலருக்கும் போதுமான அளவு Data கிடைக்கப்பெறாமை.
- ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பழக்கப்பட்ட வகுப்பறைக் கற்பித்தல் பழக்கவழக்கங்களுக்கு இந்த நேரடித் தொலைக் கற்பித்தல் முறை மாறுபட்டதாக அமைந்திருந்தமை.
இன்று கொரோனாவின் பரவல் நிலை ஓரளவு கட்டுபாட்டிற்குள் வந்து, வகுப்பறைக் கல்வி ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அடுத்த தலைமுறையினருக்கு இது பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்துமென உலக சுகாதாரத் தாபனமும், சுகாதாரத் திணைக்களமும் முன்னெச்சரிக்கைகளையும் எதிர்வு கூறலையும் கட்டாயமாக கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதால், உடனடியாக எல்லா மாணவருக்கும், கற்பிப்போருக்கும் சமத்துவமான கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது மாணவர்கள் அனைவருக்கும் சமத்துவமான கல்வியை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமையும். கற்பிப்போரின் நேரடிக் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்ட அறிவூட்டும் முறையாக இக்கற்பித்தல் முறை அமைவதால், மாணவர்கள் கற்றலில் இருந்து வழி தவறாது கண்காணித்தல் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் மேலான பங்கு, இம்முறை மூலமான கற்றல் செயற்பாட்டிற்கு இன்றியமையாததாகும்.