Tamil News
Home செய்திகள் இலங்கையில் 7 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு -2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படுவதாக அறிவிப்பு

இலங்கையில் 7 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு -2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படுவதாக அறிவிப்பு

இலங்கையில் கடந்த 9ம் தேதி ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்தும் அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16வது சரத்திற்கு அமைய நாடு தழுவிய ரீதியில் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்படும் ஊரடங்கு, நாளை (13) காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளினால் வழங்கப்பட்ட எழுத்துமூல அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளிலுள்ள பொதுச்சாலை, இரயில் தண்டவாளம், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது கடற்கரை பகுதிகளில் யாரும் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்நிலையில், இலங்கையில் முப்படையினர் களமிறக்கப்பட்டு வீதித்தடைகள் ஏற்படுத்தி பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதால், அனாவசியமான முறையில் பொதுமக்கள் எவரும் வீதிகளில் நடமாட வேண்டாமெனவும், வன்முறைகளில் ஈடுபடுவோரை எந்தவொரு வழியிலும் கட்டுப்படுத்த காவல்துறையினரும் முப்படையினரும் தயாராக உள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Exit mobile version