Home செய்திகள் வவுனியா: காவல்துறை பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வவுனியா: காவல்துறை பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்தீபனால் குறித்த முறைப்பாடு இன்றையதினம்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  செய்யப்பட்டுள்ளது.

நேற்று தன்னை  காவல் நிலையத்திற்கு அழைத்து நேற்றுமுன்தினம் (07) குருமன்காடு காளி கோவிலுக்கு அருகிலுள்ள நகரசபைக்கு சொந்தமான பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கட்டடம் குறித்த செய்தி சேகரிக்க சென்ற சம்பவங்கள் தொடர்பான வாக்கு மூலம் பெற்று கொண்டுள்ளதாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டை தன்மீது சுமத்தி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற ஒரு நடவடிக்கை கடந்த முறையும் இடம்பெற்றுள்ளதாகவும் இது இரண்டாவது முறை என்றும் தன்னை இலக்கு வைத்து குறித்த வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் இதற்கு எதிராகவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version