கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட ஈழவேந்தன் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு வெஸ்லி கல்லூரியிலும் கல்வி பயின்றார். தமிழீழக் கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராக இருந்த இவர் தனது பெயரை ஈழவேந்தன் என மாற்றிக் கொண்டார். இவரின் துணைவியார் அருளாம்பிகை. இரு மகள்கள் உண்டு.
இலங்கை மத்திய வங்கியில் பணியாற்றிய கனகேந்திரன், பின்னர் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி 1980 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1970 ஆம் ஆண்டில் வி. நவரத்தினம் தொடங்கிய தமிழர் சுயாட்சிக் கட்சியில் இணைந்தார். பின்னர் மீண்டும் தமிழரசுக் கட்சியில் சேர்ந்தார். தமிழரசுக் கட்சி அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஓர் உறுப்புக் கட்சியாக இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக் கிளைக்கு ஈழவேந்தன் தலைவராக இருந்து பணியாற்றினார்.
1977 வன்முறைகளில் இவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டில் வேறு சிலருடன் இணைந்து தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி, தமிழீழ விடுதலை முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தார். அக்கட்சியின் செயலாளராக ஈழவேந்தன் பணியாற்றினார்.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவேந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார். மூன்று மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்துக்குச் செல்லாமல் விட்டதை அடுத்து இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2007 நவம்பரில் பறி போனது.
ஈழவேந்தன் இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து கனடாவுக்குப் புலம் பெயர்ந்து வாழ்ந்துவந்த நிலையில் இன்று காலமானார்.