ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியாவை சோகத்தில் ஆழ்த்திய படகு விபத்து: ஆறாத வடுக்களாய் தொடர்கிறது: திடீர் சோகத்தில் ஆழ்த்திய படகு பாதை விபத்து நாளான 23.11.2021ஆம் திகதியை மறக்க முடியாது. திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள கிண்ணியா நகர சபையையும், கிண்ணியா பிரதேச சபையையும் இணைக்கும் பாலமே குறிஞ்சாக்கேணி பாலம். இதில் படகுப் பாதை உடைந்து கவிழ்ந்ததில் நான்கு மாணவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தார்கள்.
27 நபர்கள் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். புனரமைப்புக்காக மூடப்பட்ட இந்த பாலம் ஊடாக இயந்திரப் படகுப் பாதை மூலமான போக்குவரத்து இடம் பெற்று வந்தது. இந் நிலையில் இந்த துயரசம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவ நாளன்று, பிரதேச சபைப் பகுதியில் இருந்து நகர சபைப் பகுதியை நோக்கி பயணித்து கரையை அடைய சுமார் 50 மீற்றர் தூரத்தில் படகுப் பாதை கவிழ்ந்துள்ளது. இதனால் கிண்ணியா சமூகம் மட்டுமல்ல முழு நாடுமே சோகத்தில் மூழ்கியது. இதனால் ஆத்திரம் கொண்ட இளைஞர்கள் வீதியில் தடைகளை ஏற்படுத்தி, டயர்களை எரித்தும் தங்களைத் தாங்களே ஆற்றுப்படுத்திக் கொண்டனர். “இந்த படகு விபத்துக்கு காரணம், படகுப்பாதையை வேகமாக செலுத்தி திருப்பியமையே. நான் சுழியோடியே வெளியே வந்தேன். அத்துடன் ஐந்து பிள்ளைகளையும் காப்பாற்றியுள்ளேன்” என படகுப் பயணத்தில் உயிர் தப்பிய ஆசிரியரான எம்.சாமித் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்தார். இவர், கிண்ணியா தளவைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பும் போது இந்த விபத்தில் சிக்கியிருந்தார்.
இந்த படகு விபத்துக்கு காரணம், படகுப்பாதையை வேகமாக செலுத்தி திருப்பியமையே. நான் சுழியோடியே வெளியே வந்தேன். அத்துடன் ஐந்து பிள்ளைகளையும் காப்பாற்றியுள்ளேன்
ஆசிரியர் எம்.சாமித்
இக் கடிதத்தில் “மேற்படி விடயம் சம்மந்தமாக குறிஞ்சாக்கேணி இறங்குதுறைப் பகுதியில் பால நிர்மாண காலப் பகுதியில் பொது மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் வகையில் மோட்டார் படகு சேவையை நடாத்துவதற்கு தாங்களுக்கு பின்வரும் நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கப்படுகிறது. குறித்த சேவையின் போது பாதுகாப்பு நியமங்கள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும், குழந்தைகள் மற்றும் பாடசாலைச் சிறார்களுக்கு மேற்படி சேவையானது இலவசமாக வழங்கப்பட வேண்டும், படகினது உறுதிப்பாடு குறித்து அவ்வப்போது சோதிப்பது அவசியமானது. மேற்படி நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் தங்களுக்கு வழங்கப்படும் அனுமதி இரத்துச் செய்யப்படும் ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தியிடம் வினவிய போது, “தவிசாளரால் வழங்கப்பட்ட இந்த அனுமதிக் கடிதம் சபைக்கோ உறுப்பினர்களுக்கோ தெரியாமல் வழங்கப்பட்டுள்ளது. இது பல வாதப் பிரதிவாதங்களை உண்டாக்கியிருக்கிறது.
முறைகேடாக தவிசாளரால் வழங்கப்பட்ட சான்றிதழுக்கு தவிசாளரே வகை கூற வேண்டும். விசாரணை ஆரம்பிக்கும் போது தாமாகத் தகவல்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
இதற்கு முன்னரும் இவ்வாறு பல முறைகேடுகள் நடந்து அதற்கு நான் சட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கிறேன்” என்றார்.
இந்த பாலம் சுமார் 100 மீற்றர் தூரம் கொண்டது. இதன் ஊடாக நாளாந்தம் 8000 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணித்து வந்தார்கள். 1977 களில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்த குறிஞ்சாக்கேணி பாலம் தொடர்பில் பல வாக்குறுதிகள் அரசியல்வாதிகளால் கொடுக்கப்பட்டது. ஆனாலும் வெறும் பேச்சுடன் முடிவடைந்தது. பின் 2015 இல் வெள்ள அனர்த்தம் காரணமாக பகுதி பகுதியாக இந்த பாலம் இரண்டாக பிளந்து உடைந்து சேதமாகியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தற்காலிக இரும்புப் பாலம், வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக அமைக்கப்பட்டது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிண்ணியா நகர சபை மைதானத்தில் 2014 டிசம்பர் மாதமளவில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்தில் இப் பாலத்தை முழுமையாகப் புனரமைப்பு செய்து தருவதாக வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. இதனால் பல போராட்டங்களை மக்கள் நடாத்தினர்.
2019இல் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த பாலத்தை மீண்டும் புதிப்பிப்பதற்காக அடிக்கல் நடப்பட்டது. பின்னர் அதுவும் தோல்வி கண்டது. அதைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க, சுமார் 750 மில்லியன் ரூபா செலவில் குறித்த பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவித்து, தற்போதைய அரசாங்கத்தின் வீதி மற்றும் நெடுஞ்சாலை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிமால் லான்சா அவர்களினால் 2021.04.10ஆம் திகதி அடிக்கல் நாடப்பட்டது.
இந்த படகு விபத்து தொடர்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் படகு உரிமையாளர், படகு ஓட்டுனர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கிண்ணியா தளவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த விபத்தில் உயிர் தப்பியவர்களில் தாயொருவர், “நீரில் மூழ்கும் போது பிள்ளைகளைக் கூட கையால் பிடிக்க முடியவில்லை. எப்படி பிடிப்பது. ஏதோ உயிர் தப்பி பிள்ளையுடன் கரை சேர்ந்தேன் ” என்றார் கண்ணீருடன்.
மற்றுமொரு தாய் தனது பிள்ளையுடன் உயிர் தப்பியதை இவ்வாறு விவரித்தார், “காலை 7.10 மணியளவில் படகில் ஏறி அதன் மையப்பகுதிக்கு வந்தோம். நிறைய பயணிகளை ஏற்றியிருந்தனர். இதன் போது ஒரு பகுதி குடை சாய்ந்து நீரில் மூழ்கடிக்கப்பட்டது. எனக்கு நீந்தத் தெரிந்ததால் ஒரு கையால் பிள்ளையை இறுகப் பிடித்து காலால் நீந்தி கரை சேர்ந்தேன். ஆழமான பகுதியில் இருந்தே நீந்தி வந்தேன். அதன் பின் ஆட்டோவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டேன் ” என தனது உயிர் தப்பிய வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார்.
குறித்த பாலம் ஊடாக பயணிப்பது இலகு என்றும், ஆனால் வீதி ஊடாக நகர எல்லைக்கோ அல்லது பிரதேச எல்லைக்கோ பயணிப்பதாக இருந்தால் சுமார் 3 கிலோ மீற்றர் தரை வழி போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டும். இதன் காரணமாகவே படகுப் பாதையை மக்கள் பயன்படுத்த முடிவு எடுத்திருந்தனர்.
பல கனவுகளுடன் பயணித்த சிறார்கள், அவர்கள் கல்விக்காய் காத்திருந்த எதிர்காலத்தை நினைத்து பார்க்கையில் மனம் கனக்கிறது. ஆறாத் துயரால் பெற்றார்கள் ஆழ்ந்த மனவேதனையுடன் இருக்கிறார்கள். இந்த பாலம் இருந்திருந்தால் இவ்வாறான படகு விபத்து இடம் பெற்றிருக்காது.
மேலும் இந்த படகு போக்குவரத்துக்கான அனுமதி வழங்கியது தொடர்பில் கலந்துரையாடப்படாத நிலை இங்கு பெரும் குற்றமாகவே பார்க்கப்படுகிறது.
கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிகார் இது தொடர்பில் தெரிவிக்கையில், “நகரசபை அனுமதி கொடுத்தது தெரியாது. ஆனால் தான் முன்னர் இழுவைப் படகுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கினேனே தவிர, அதற்கான எழுத்து மூலமான ஆவணங்கள் கொடுக்கப்படவில்லை. சுமார் 75 மீற்றர் தூரமான ஆழம் குறைந்த சேவையை நடாத்த தனியாருக்காக ஒத்துழைத்தேன்” என்றார்.
இந்த இயந்திர படகுப் பாதை மூலமாக நாளாந்தம் 1000 க்கும் மேற்பட்டோர்கள் போக்குவரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
உயிரிழந்தவர்களுக்காகவும், உயிர்தப்பிய உறவுகளுக்காகவும் ஆழ்ந்த அனுதாபங்களை கிண்ணியாவில் துக்கதினமாக 25.11.2021 அன்றைய நாள் அஞ்சலிக்கப்பட்டது. ஆனாலும் எம்மவர்களின் உள்ளங்களில் அந்த நாட்களை ஒரு போதும் மறக்க முடியாது .
இந்த பாலம் அபிவிருத்தி தொடர்பில் அரசியல் தலைமைகள், அரச அதிகாரிகள் ஆரம்பத்தில் கரிசனை காட்டாது .மக்களின் கருத்துக்களை செவிசாய்க்காதது பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்கள் இனியும் நடக்ககக் கூடாது இவ்வாறான சம்பவங்களில் விபத்து இடம் பெற்ற நாளன்று கிண்ணியாவே சோகத்தில் குடி கொண்டது. ஆத்திரமடைந்த இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் வீட்டினை சேதப்படுத்தினார்கள் நீதி கேட்டு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டார்கள். இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது வரையில் அரசாங்கத்தால் எந்த உதவித்திட்டங்களும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தங்களுக்கான நியாயமான விரைவான பாலம் அபிவிருத்தியை உரிய காலத்தில் செய்திருந்தால் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்காது எனத் தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், இந்த விபத்து குறித்து நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் பாலத்தினை விரைவாக அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.