Tamil News
Home செய்திகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னலைப்படுத்த இராணுவத்தினருக்கு உத்தரவு

காணாமல் ஆக்கப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னலைப்படுத்த இராணுவத்தினருக்கு உத்தரவு

ஆட்கொணர்வு மனு மீதான கட்டளை சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரானதாகவுள்ளமை மிகப்பெரிய வெற்றி எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னலைப்படுத்தவும் அல்லது காரணம் கூறவும் இராணுவத்தினருக்கு  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக மூத்த சட்டத்திரணி எஸ். இரட்ணவேல் தெரிவித்துள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான்), சின்னத்துரை சசிதரன் (எழிலன்), உருத்திரமூர்த்தி கிருஸ்ணகுமார் (கெலம்பஸ்) ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஆட்கொணர்வு மனுக்கள் 3 மீதான தீர்ப்புகள் இன்று வழங்கப்பட்டன. போரின் இறுதியில் இராணுவத்திடம் சரணடைந்த குடும்பத்தினர் சார்பில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்ற நீதிவானால் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதன் பிரகாரம் காணாமல் ஆக்கப்பட்டவர் இராணுவத்திடம் சரணடைந்தமைக்கான சான்றுகள் இருப்பதில் மன்று திருப்தியடைந்து அவர் இராணுவத்தினரின் வசம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் என்ற தொனியில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் அல்லது அப்படி முடியாது போனால் அதற்கான காரணங்களை விளக்கவும் எதிர்வரும் மாதம் 22 ஆம் திகதி வழக்குகள் திகதியிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஆட்கொணர்வு மனு மீதான கட்டளை சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரானதாக ஆக்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

ஏனெனில் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் தங்களுடைய உறவினர்களை தேடி வந்த பயணம் 2013 இல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 9 வருடங்களுக்க பின்னர் பூரணமாக நிறைவடைந்துள்ளது.இது தொடர்பில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினர் இதற்கான காரணத்தினை சொல்லித்தான் ஆகவேண்டும். பொறுப்புக்கூறல் அவர்களை சார்ந்தது. இதுவரை காலமும் ஏதோ காரணத்தினை சொல்லிக் கொண்டிருந்தவர்களிடம் அதற்கான பொறுப்பை இந்த நீதிமன்றம் கேட்கின்றது. அதை சொல்லித்தான் ஆகவேண்டும்.

நீதிமன்றத்தின் மூலம் எமக்கு கிடைத்த ஒரு வெற்றி மற்றும் நிவாரணமாகவே இதனைக் கருதவேண்டியுள்ளது.

அத்துடன் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

எனவே இனிமேலாவது காணால் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மட்டுமல்ல, மேலும் பல விடயங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” – என்றார்.

Exit mobile version