யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு மீனவர் சங்கங்கள் இணைந்து இந்தியத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்ததால் தூதுவராலயம் முன்பாக பெரிமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
முற்பகல் 11 மணியளவில் மீனவர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டப் பேரணியாகத் தூதுவராலயத்தை நோக்கி முற்றுகையிடச் சென்றபோது தூதுவராலயத்துக்கு அருகாமையில் போராட்டக்காரர்கள் பொலிஸாரால் இடைமறிக்கப்படனர்.
இதனைத் தொடர்ந்து மீனவர் சங்கப் பிரதிநிதிகள் 7 பேர் மட்டும் தூதுவராலயத்துக்குச் சென்று தூதுவரைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்னர். இதன்போது போராட்டக்காரர்கள் இந்திய, இலங்கை அரசுகளுக்கு எதிராகப் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், இந்திய இழுவைப் படகு உரிமையாளர்களே எங்களையும் வாழவிடு, கடற்றொழிலாளர்களைப் பிரித்தாளும் தந்திரத்தைச் செய்யாதே, தொப்புள் கொடி உறவுகளைப் பிரிக்காதே, இந்திய அரசே இலங்கையின் வடபகுதி மீனவர்களைத் திரும்பிப் பார், அத்துமீறும் இந்திய மீனவர்களின் அராஜகம் அடியோடு ஒழிய வேண்டும், சட்டவிரோத அத்துமீறலைத் தடுத்து நிறுத்து, வடக்கு மீனவர்களின் வளங்களைச் சூறையாடாதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.