Tamil News
Home உலகச் செய்திகள் புத்தாண்டில் பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் அவுஸ்திரேலியாவின் தேசிய கீதம்

புத்தாண்டில் பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் அவுஸ்திரேலியாவின் தேசிய கீதம்

இந்தப் புத்தாண்டு தினத்தில் இருந்து அவுஸ்திரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று  அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.

தேசிய கீதம் இனி அவுஸ்திரேலியாவை ‘இளமையான, சுதந்திரமான’ என்று குறிப்பிடாது. அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் இந்த ஆச்சரியமளிக்கும் அறிவிப்பு, பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. ஒற்றுமைக்கான ஊக்கத்தை இந்த மாற்றம் உருவாக்கும் என்று நம்புவதாக மாரிசன் கூறினார்.

வெள்ளையின ஆங்கிலேயர்கள் 18-ம் நூற்றாண்டில் குடியேறுவதற்கு முன்பே பல பத்தாயிரம் ஆண்டுகளாக மக்கள் வசித்துவரும் தீவு அவுஸ்திரேலியா.

அட்வான்ஸ் அவுஸ்திரேலியா ஃபேர்(Advance Australia Fair) என அழைக்கப்படும் தேசிய கீதத்தில் இருந்து ‘நாம் இளமையும், சுதந்திரமும் ஆனவர்கள் என்பதால்’ என பொருள் தரும் “ஃபார் வீ ஆர் யங் அன் ஃப்ரீ” (“For we are young and free”) என்ற வரி நீக்கப்பட்டு, ‘ஃபார் வீ ஆர் ஒன் அன் ஃப்ரீ’ (“For we are one and free.”) என்ற வரி சேர்க்கப்பட்டுள்ளது.

“நாம் இளமையானவர்கள்” என்று பொருள் தந்த இடம், தற்போது “நாம் ஒன்றே” என்று பொருள் தரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரீமியர் கிளாடிஸ் பெரஜிக்லியன் (Premier Gladys Berejiklian) இந்த மாற்றத்தைப் பரிந்துரைத்தார்.

இந்த மாற்றம், நாடாக நாம் கடந்து வந்த தூரத்தை அங்கீகரிக்கிறது. 300க்கும் மேற்பட்ட தேசிய மூதாதையரிடம் இருந்தும், மொழிக் குழுக்களிடம் இருந்தும் பெறப்பட்டதே நம் தேசத்தின் கதை என்பதை, புவியில் மிக வெற்றிகரமாக இயங்கும் பன்முக பண்பாடுகள் கொண்ட நாடு நாம் என்பதையும் இது அங்கீகரிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகத் தொற்றின்போது அவுஸ்திரேலியா ஏற்படுத்திக்கொண்ட ஒற்றுமையைக் கொண்டாடும் வகையில் இந்த மாற்றம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “பூர்வகுடிகள் மூலமாக மிகப் பழமையான தொடர்ச்சியான பண்பாடு நம்மிடம் இருக்கிறது என்பது குறித்து நாம் பெருமைப்படவேண்டும்” என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் அந்தோனி அல்பேனீஸ்.

சமீப ஆண்டுகளில் பண்பாட்டு, அரசியல் நிகழ்வுகளில் தங்கள் நாட்டின் பழமையான பூர்வகுடி வரலாற்றை அங்கீகரிக்க அவுஸ்திரேலியா பெரும் முயற்சிகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் மாதம் தேசிய ரக்பி அணி வீரர்கள் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தை ஒரு பூர்வகுடி மொழியில் முதல் முதலாகப் பாடியது குறிப்பிடத்தக்கது.

சிட்னி பகுதியை சேர்ந்த இயோரா நேஷன் என்ற மக்கள் குழுவின் மொழியில் தேசிய கீதத்தைப் பாடிய பிறகு அவர்கள், ஆங்கிலத்தில் பாடினார்கள்.

இந்த மாற்றம் எந்தப் பொருளையும் நீக்கவில்லை. ஆனால், நிறைய பொருள் சேர்த்திருக்கிறது என்று குறிப்பிட்டார் மாரிசன்.

நன்றி பிபிசி தமிழ்

Exit mobile version