மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் மூன்று தினங்களுக்கு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்
மேலும் சுகாதார பிரிவினரின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபையின் ஆணையாளர் மா.தயாபரன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனைகளில் 26 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் இன்று மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் ஒரு நாள் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று தொடக்கம் மேலும் மூன்று தினங்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
மருந்தகம்,பலசரக்கு விற்பனை நிலையம்,இறைச்சி,மீன்கடைகள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேவேளை அத்தியவசிய தேவை கருதி திறக்கப்படும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சமுக இடைவெளியினை பேணி, கைகளைக் கழுவும் வசதிகள் செய்யப்பட்டு, உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது மிக முக்கியம் என்று கூறிய அவர், குறித்த பணிப்புரைகளை மீறும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக மாநகர கட்டளைச் சட்டத்தின் ஊடாகவும், தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு ஊடாகவும் இறுக்கமான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொதுமக்களும் கொரோனா அச்சத்திலிருந்து நம் பிரதேசத்தினை மீட்டெடுக்க பூரண ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.