சில மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி இலங்கையில் காலமானார்.
விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது. இதையடுத்து இன்று இரவு சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச்செல்லப்படும் அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளளது. தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப்பில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
லோயர்கேம்ப் குருவனூத்து பாலம் அருகே இளையராஜாவுக்கு 2.5ஏக்கர் பரப்பளவில் பங்களா உள்ளது. இங்கு இளையராஜா தனது குடும்பத்தினருடன் தங்குவதற்கான அறைகள், தியான மண்டபம் உள்ளிட்டவை உள்ளன. இந்த வளாகத்தில் இளையராஜாவின் அம்மா சின்னத்தாய், மனைவி ஜீவா ஆகியோரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பவதாரணியின் உடலும் இங்கு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் திரைப்படத்துறையினரின் அஞ்சலிக்குப் பிறகு பவதாரிணியின் உடல் இங்கு கொண்டு வரப்பட உள்ளது. இதுகுறித்து திரையுலகினர் கூறுகையில், “இளையராஜாவுக்கு சொந்த ஊர் தேனிமாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் ஆகும். இருப்பினும் தமிழக எல்லையான கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் அவருக்குச் சொந்தமான பங்களா உள்ளது. தீபாவளி, தாயார் மற்றும் மனைவி நினைவுநாளில் இங்கு குடும்பத்தினருடன் வருவார். பவதாரிணியின் உடலும் இங்கு அடக்கம் செய்யப்பட உள்ளது” என்றனர்.