Tamil News
Home செய்திகள் உச்சத்தைத் தொடப்போகும் வடக்கின் வெப்ப நிலை – மக்களை அவதான இருக்குமாறு எச்சரிக்கை

உச்சத்தைத் தொடப்போகும் வடக்கின் வெப்ப நிலை – மக்களை அவதான இருக்குமாறு எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அடுத்த சில நாட்களுக்கு 42 பாகை செல்சியஸ் இனை விட வெப்பநிலை உயர்வாக இருக்கும் என்று யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளா் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது-

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அடுத்த சில நாட்களுக்கு 42 பாகை செல்சியஸ் இனை விட வெப்பநிலை உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை கிடைத்த பகுதிகளில் மழைக்கு அடுத்த நாட்களில் உயர் வெப்பநிலை நிலவும்.

சூரியனின் கதிர்வீச்சின் குறிப்பிட்டளவு பங்கினை தெறிப்படையச் செய்வதில் வளிமண்டலத்தில் உள்ள தூசு துணிக்கைகள் பங்களிப்பு செய்கின்றன. அதனால் புவியின் மேற்பரப்புக்கு வருகின்ற கதிர்வீச்சின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. இதனால் வெப்பநிலையும் கட்டுப்படுத்தப்படும். மிதமான மழை கிடைக்கும்போது அத் தூசு துணிக்கைகள் மழை நீரால் கழுவப்பட்டு அவை அகற்றப்படும்.

வடக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மழை கிடைத்த அடுத்த நாட்களில் அதிகளவான வெப்பநிலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. கிடைக்கும் மழையும் தற்போது நிலவும் அதிக வெப்பநிலையைக் கட்டுப்படுத்தப் போதுமானதல்ல.

எனவே மழை பெய்தால் வெப்பநிலை குறையும் என நினைப்பது தற்காலிகமானது.

எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை சில பகுதிகளில் குறிப்பாக உள் நிலப்பகுதிகளில் (வடக்கு மாகாணத்தின் நடுப் பகுதிகள்) மிக உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று 2ம் திகதி நெடுங்கேணி, பனைநின்ற குளம் மற்றும் அம்பகாமம் பகுதிகளிலும், நாளை 3ம் திகதி பட்டிக்குடியிருப்பு, வெடிவைத்தகுளம், நெடுங்கேணி, கொக்கச்சான்குளம், பனைநின்றகுளம், அம்பகாமம், மற்றும் ஒதியமலை பகுதிகளிலும் எதிர்வரும் 4ம் திகதி மாங்குளம், கனகராயன்குளம், பாலைப்பாணி, மூன்றுமுறிப்பு, வெடிவைத்தகல்லு, கொக்கச்சான்குளம், அம்பகாமம், பன்றிக்கெய்தகுளம் மற்றும் புளியங்குளம் பகுதிகளில் பிற்பகல் 1.00 மணி முதல் 2.30 மணி வரை நாளின் அதிகூடிய வெப்பநிலை 42 பாகை செல்சியஸ் இனை விட உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இக்காலப்பகுதியில் உணரக்கூடிய வெப்பநிலை 45 பாகை செல்சியஸ் இனை விட உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றும் கூட வட மாகாணத்தின் உள் நிலப்பகுதிகள் பலவற்றில் குறிப்பாக வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, செட்டிகுளம், நெடுங்கேணி மற்றும் மடு பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியளவில் 42 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேவேளை உணரக்கூடிய வெப்பநிலை 44 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.

தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் கிடைக்கும் வெப்பச் சலன மழை மேலும் ஒன்றிரண்டு நாட்களுக்கு தொடரும். ஆனால் இம் மழை செறிவான இடி மின்னலுடன் கூடிய மழை என்பதனால் இடி மின்னல் தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது சிறந்தது.

அதேவேளை எதிர்வரும் 9ம் திகதிக்கு பின்னர் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையின்படி இதனால் எமக்கு நேரடியான பாதிப்புக்கள் எவையும் இல்லை. எனினும் உருவாகும் காலப்பகுதிக்கு அண்மித்தே மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

Exit mobile version