Home ஆய்வுகள் சனல்போர் காணொளி தற்போது வெளிவர காரணம் என்ன? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சனல்போர் காணொளி தற்போது வெளிவர காரணம் என்ன? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இலங்கையில் இடம்பெறும் பூகோள அரசியல் நகர்வுகளில் மேற்குலகம் தனது மற்றுமொரு காயை நகர்த்தியுள்ளது. பிரித்தானியாவை கொண்ட சனல் போர் நிறுவனம் வெளியிட்ட காணொளி என்பது ராஜபக்சா குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலத்தை இல்லாது செய்யும் ஒரு நகர்வு.

தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் போரில் இலங்கை அரசுக்கு நிபந்தனைகளின்றி ஆதரவளித்த இந்தியாவும், அமெரிக்காவும் போரின் பின்னர் தமது நிலைகளை உறுதி செய்வதில் காண்பித்த போட்டிகள் தான் இன்றும் இலங்கையை மீளமுடியாத பொறிக்குள் தள்ளிவருகின்றது.

போரின் பின்னர் ராஜபக்சாக்களுக்கு இந்திய தரப்பு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததும், சீனா உள்நுளைந்ததும் மேற்குலகம் போட்ட கணக்கு தப்பாகிபோனது.

அதனை சரி செய்வதற்கு அமெரிக்கா கிறீன் கார்ட் வைத்திருந்த சரத் போன்சேக்கா மூலம் இராணுவப் புரட்சிக்கு அமெரிக்கா முயன்றது. ஆனால் அதனை இந்திய புலனாய்வுத்துறை ராஜபக்சாக்களுடன் இணைந்து முறியடித்தது.

channel4 சனல்போர் காணொளி தற்போது வெளிவர காரணம் என்ன? - வேல்ஸ் இல் இருந்து அருஸ்அதன்பின்னர் மேற்குலகத்தின் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஜநாயகத்தை போதித்தல் என்ற போர்வையில் இலங்கையில் கால்பதித்தன. பிரித்தானியாவில் இருந்த சந்திரிக்கா களமிறக்கப்பட்டு சுதந்திரக்கட்சி உடைக்கப்பட்டது. பல மில்லியன் டொலர்கள் வாரி இறைக்கப்பட்டு மியான்மாரிலும், இலங்கையிலும் ஆட்சிமாற்றம் கொண்டுவரப்பட்டது.

2014 ஆம் ஆண்டு சீன தலைவர் இலங்கைக்கு வருகைதந்ததாலும் பல உடன்பாடுகள் எட்டப்பட்டதாலும் சினமடைந்த இந்தியா இந்த ஆட்சிமாற்றத்தில் சிறு இலபமடையலாம் என பார்த்தது. அதாவது தன் செய்ய வேண்டிய வேலையை அமெரிக்கா செய்கின்றது என பொறுமைகாத்தது.

ஆனால் தனக்கு கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி இரு தரப்பு படைத்துறை சேவைகள் Acquisition and Cross Servicing Agreement (ACSA) உடன்படிக்கையை (இந்த உடன்படிக்கை 2017 ஆம் ஆண்டுதான் புதுப்பிக்கப்பட்டது.) பலப்படுத்திய அமெரிக்கா, சோபா மற்றும் மிலேனியம் சலஞ் என்று நகர ஆரம்பித்தது. தான் மிகவும் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளதை உணர்ந்தது இந்தியா, சீனாவைவிட மிகப்பெரும் ஆபத்து தனக்கு அருகில் நெருங்குவதை அவர்கள் உணர்ந்தபோது ஒரு ஆட்சிiமாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டனர்.

ஏற்கனவே போர்க்குற்ற வழக்குகள் மற்றும் ஐ.நா தீர்மானங்கள் என மேற்குலகத்திற்கும் – ராஜபக்சாக்களுக்கும் இடையில் நிலவிய விரிசல்களை சாதகமாகக்க நினைத்தது இந்தியா. எனவே தான் இந்தியா ஒருபோதும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதில்லை.

ராஜபக்சாக்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் இலங்கையில் உள்ள பொரும்பான்மை சிங்கள இனத்திற்கு ஏனைய இனங்களால் அச்சுறுத்தல்கள் இருப்பதான தோற்றப்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழர் தரப்பு இல்லை முஸ்லீம் தரப்பு தான் அவர்களின் பகடைக்காய்கள்.

2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வவுணதீவில் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்டனர். அதனை விடுதலைப்புலிகள் செய்ததாக கூறி கிளிநொச்சிவரை சென்ற இலங்கை படையினர் முன்னாள் போராளிகளை கைது செய்தனர். அதனை பயன்படுத்தி மகிந்தா தன்னை பிரதமராக அறிவித்தார். ஆனால் அந்த முயற்சி எதிர்பார்த்த படி வெற்றிபெறவில்லை.

இரண்டாவது திட்டம் தீட்டப்பட்டது. அது தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல். இந்த தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் இலங்கை பிரிவு செய்ததாக கூறியபோதும் தாக்குதல் இடம்பெற்றபோது அந்த அமைப்பு சிரியா மற்றும் ஈராக்கில் முற்றாக அழியும் நிலையில் இருந்தது. மறுவளமாக கூறப்போனால் இந்த தாக்குதல் இடம்பெற்றதை பத்திரிகைகளில் பார்த்து தான் அந்த அமைப்பே அறிந்திருக்கும். எனவேதான் இரண்டு தினங்கள் கழித்து அதன் உரிமைகோரல் வந்தது. அதுவும் மிகவும் பலவீனமான நிலையில்.

இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி சுரேஸ் சாலேயும் துணைஇராணுவக்குழுவின் தலைவர் பிள்ளையானும், ராஜபக்சாக்களுமே இந்த குண்டுவெடிப்பின் முக்கிய பங்குதாரர்கள் என்பது சனல்போர் வெளியிட்ட ஆதாரங்களின் தொகுப்பு. அதனை பிள்யையானின் முன்னாள் பேச்சாளர் அசாத் மௌலானா வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.

அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக தனது அடையாளத்தை வெளிப்படுத்தாத முன்னாள் படைத்துறை புலனாய்வு அதிகாரியும், முன்னாள் காவல்துறை புலனாய்வு அதிகாரி தமது கருத்துக்களையும் பதிவுசெய்துள்ளனர். தாக்குதல் திட்டம் தீட்டப்பட்ட இடம் மற்றும் அந்த திட்டத்தில் பங்குகொண்டவர்களே தாக்குதல் நடத்தியதை தான் தாக்குதல் நடைபெற்ற இடங்களில் கிடைத்த காணொளிகள் மூலம் உறுதிப்படுத்தியதாக மௌலானா கூறுகின்றார்.

ஆனால் தான் அந்த சமயம் அங்கு இருக்கவில்லை என சுரேஸ் சாலே கூறினாலும் அவர் தான் இருந்த இடத்தை குறிப்பிடவில்லை. எனினும் சனல்போர் காணொளி தொடர்பில் மறுப்பறிக்கை வெளியிட்ட கோத்தபாயா சுரேஸ் இந்தியாவில் இருந்ததாக கூறுகின்றார். அதாவது ஒரு புலனாய்வு அதிகாரிக்கு இந்தியாவில் இருந்து இலங்கை வந்துபோவது கடினமான விடையமாக இருக்க முடியாது.

மேலும் தேவாலையங்கள் மற்றும் ஆடம்பரவிடுதிகளை குறிவைத்து தாக்கிய தாக்குதலாளிகள் இந்தியாவுக்கு சொந்தமான விடுதியை தாக்க முற்படவில்லை எனவும், தவறுதலாக அங்கு சென்ற தாக்குதலாளி கூட அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதனை  பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரைம்ஸ் நாளேடு இந்தியாவுக்கு சொந்தமான விடுதி என கோடிட்டு காட்டுகின்றது. தாக்குதலாளிக்கு தொலைபேசி அழைப்பு வருவது மற்றும் அவர் அங்கிருந்து வெளியேறுவது பதிவாகியுள்ளது.

மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதலாளிகளின் கருத்துப்படி இலங்கையில் அமெரிக்காவின் படைத்துறை பிரசன்னம் அதிகரிப்பதே தாக்குதலுக்கான காரணம் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது அமெரிக்க பிரசன்னம் அதிகரிப்பதால் யாருக்கு பிரச்சனை என்பதை நான் உங்களுக்கு கூறத்தேவையில்லை.

அதாவது இந்த தாக்குதல் இலங்கைகுள் இருந்து மட்டும் திட்டமிடப்படவில்லை என்பது தெளிவானது. ஆனால் அன்று ஏன் மேற்குலகம் தற்போது வெளியிட்ட ஆதாரங்களை வெளியிடவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த தாக்குதல் யார் எதற்காக செய்தது என்று அவர்களுக்கு தெரிந்தபோதும், அதனை மூடிமறைத்து அன்றைய ரணில்-மைத்திரி அரசை காப்பாற்றவே மேற்குலகம் முனைந்தது.

அமெரிக்காவின் 33 எப்.பி.ஐ அதிகாரிகளும், பிரித்தானியாவின் வெளியக புலனாய்வுத்துறையான எம்.ஐ-6 இன் 12 அதிகாரிகளும் இலங்கை அரசு அழைக்காமலே உடனடியாக களத்துக்கு வந்து தமக்கு தேவையான விசாரணைகளை முடித்துக்கொண்டு, ஆதாரங்களையும் எடுத்துச் சென்றதை இலங்கை அரசே உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் அவர்களால் அன்றைய அரசை காப்பாற்ற முடியவில்லை. எனினும் இந்த தாக்குதலால் ஏற்படப்போகும் பொருளாதார வீழச்சியை பயன்படுத்தி புதிய அரச கவுழ்ப்பது அவர்களின் திட்டமாக இருந்திருக்கலாம். ஏனெனில் இந்த தாக்குதலின் பின்னர் சுவிஸில் இருந்து வந்த விமானத்தில் ஒரு பயணியே இலங்கை வந்திருந்தார். இலங்கையின் முக்கிய வருமானமே சுற்றுலா துறைதான்.

அதன் பின்னர் வந்த கோவிட்டும் மேற்குலகத்தின் நகர்வை இலகுவாக்கியது. 2022 ஆம் ஆண்டு கோத்தபாயா துரத்தப்பட்டார். மீண்டும் ரணில் வந்தார். சரி உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பயன்கள் இல்லாது செய்யப்பட்டுவிட்ட நிலையில் தற்போது ஏன் சனல்போர் இந்த காணொளியை வெளியிட்டுள்ளது?

இலங்கையில் ஒரு மதக்கலவரம் இடம்பெறப்போவதாக பக்கத்து நாட்டு புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்க தூதுவர் ஜுலி சங் குருந்தூர்மலை விவகாரத்தை வைத்து இந்தியா ஒரு மதக்கலவரத்தை உருவாக்கப் போகின்றதா என்பதை நேரிடையாகவே தன்னை சந்தித்தவர்களிடம் கேட்டிருந்தார்.

அதாவது மீண்டும் ஒரு வன்முறையை தூண்டி ஆட்சியை மாற்ற வெளிநாட்டு சக்தி முயல்வதாக அமெரிக்கா சந்தேகப்படுகின்றது. எனவே தான் பிரித்தானியா களமிறங்கியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையின் கனாதியும் அதனை தான் சொல்கின்றது.

அதாவது ராஜபக்சாக்களையும், அவர்களின் வரவை விரும்பும் பக்கத்து நாட்டையும் முறியடிப்பதற்கான அஸ்திரங்களே ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையும், சனல்போர் நிறுவனத்தின் காணொளியும்.

அதாவது இலங்கை என்ற ஆடுகளம் மோசமாகுமே தவிர தற்போதைக்கு தணிவதற்கான சாத்தியங்கள் இல்லை.

 

 

Exit mobile version