Tamil News
Home செய்திகள் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைதாகாமை ஆபத்து; ஞானசார தேரர்

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைதாகாமை ஆபத்து; ஞானசார தேரர்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் உள்ளவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பது ஆபத்தானது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –

‘தேரர்களாகிய நாங்கள் துறவறம் செல்லும் போது எங்களின் முடி மட்டும்தான் வெட்டப்படுமே ஒழிய, எங்களின் உரிமைகள் வெட்டப்படுவது கிடையாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இன்று அனைத்து அரசியல் கட்சிகளும் தேரர்களின் அரசியல் பிரவேசத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நாம் அரசியலுக்கு வரவேண்டுமா – இல்லையா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். மகாநாயக்க தேரர்கள்கூட இதுதொடர்பாக எமக்கு கூறத்தேவையில்லை.

இன்று இதுதொடர்பாக சமூகத்தில் பிழையானதொரு புரிதல் இருக்கிறது. இது பிழையானது என்றுதான் நாம் கூறவேண்டும். முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாக என்னை விட அதிகமாக பேசிய ஒருவரை யாராலும் காண்பிக்க முடியுமா? இல்லை.

எவ்வாறான எதிர்ப்புக்கள் வந்தாலும் எமது செயற்பாடுகளை நாம் தொடர்ச்சியாக மேற்கொள்வோம். முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாக பல்வேறு தகவல்களை வழங்கிய எமக்கு எதிராக கடந்த காலங்களில் சட்டம் செயற்பட்டது.

ஆனால், தீவிரவாதத்திற்கு துணை செய்தவர்கள், கொலைக்காரர்களுக்கு எதிராக எந்தவொரு செயற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை. சரியாக இருப்பின், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைது செய்து, இரகசிய இடத்தில் வைக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்தும் வெளியில் சுதந்திரமாக இருப்பார்களாயின், அனைத்து ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள்’ என்றார்.

Exit mobile version