மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர், மதிய உணவு இடைவேளை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தமது போராட்டத்தை ஆரம்பித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர், வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை பேரணியாக சென்று ஆளுநருக்கான மகஜரினை கையளித்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கமைய வங்கி ஊழியர்களின் பயிற்சிக் காலத்தை 2 வருடங்களுக்கு மட்டுப்படுத்துக ,
அதிகாரிகளே பயிற்சிக் காலத்தினை நீடித்து வங்கி ஊழியர்களது உழைப்பினை சுரண்டுவதை உடனே நிறுத்துக ,
அதிகாரிகளே வங்கி ஊழியர்கள் உயிர் வாழ்வதற்கேற்ற ஓய்வூதியக் கொடுப்பனவை உடனே நிறுத்துக மற்றும் பிரதமரின் உத்தரவிற்கமைய இலங்கை வங்கியின் பயிலுநர் ஊழியர்களை 2 வருடங்களில் நிரந்தரமாக்குக என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வங்கி ஊழியர்களிற்கான ஓய்வுதியத்திட்டம் தொடர்பான பிரச்சனை, வங்கி ஊழியர்களின் பயிற்சிகாலத்தினை இரண்டு வருடங்களாக மட்டுப்படுத்துதல், மற்றும் இலங்கை மர்ச்சன்ட் வங்கியின் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.