அரசியல் தீர்வு என்ற விடயத்தை குறிப்பிட்டுக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றது. ஆதரவு வழங்குவதால் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மாத்திரமே பெரிதும் பயனடைந்துள்ளார்கள். ஆனால் எதிர்பார்ப்புடன் அபிவிருத்திகள் ஏதும் பெற்றுக் கொள்ளாத வடக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்றமடைந்துள்ளார்கள். இறுதியில் அபிவிருத்தியும் அரசியல் தீர்வும் வெறும் கானல் நீராகவே காணப்படும் என்று எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் எவரும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை. மாறாக அரசாங்கத்தில் இருந்து வரப்பிரசாதங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்று எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
தமிழ் மக்களின் ஆதரவினை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிற்கு பெற முடியாது என்ற தவறான கருத்தினை அரசாங்கம் தற்போது குறிப்பிட்டு கொள்கின்றது. நிச்சயம் வடக்கு கிழக்கு உட்பட ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சி மாற்றம் ஏற்படும். வடக்கு மக்கள் தற்போது எவர் தலைமையிலான ஆட்சி சிறந்தது என்பதை தீர்மானித்து விட்டார்கள்.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் எவரும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. மாறாக தேவையற்ற நிறைவேறாது என்று தெரிந்த ஒரு விடயத்திற்கு முக்கியத்துவம் வழங்கி காலத்தை வீணடித்து தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றார்கள்.
மறுபுறம் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் பெருந்தோட்ட மக்களுக்கு எவ்வித நியாயமான தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லை. ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் இறுதியிலும் மலையகத்தில் இயற்கை அனர்த்தம் ஏற்படுவது எதிர்பார்க்கக் கூடியதொன்றாக காணப்படுகின்றது. ஆனால் மலையக மக்களுக்கு நியாயமான தீர்வினை அரசாங்கம் வழங்கவில்லை. அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக மலையக அரசியல்வாதிகள் வெறும் பேச்சளவில் மாத்திரமே கருத்துரைக்கின்றார்களே தவிர செயலளவில் எதனையும் வினைத்திறனாக செயற்படுத்தவில்லை.
தமிழ் மக்கள் தொடர்ந்து தம்மை ஏமாற்றி அதில் சொகுசாக வாழும் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்குவதால் எவ்வித பயனும் ஏற்படாது. கடந்த நான்கு வருட காலமாக அரசாங்கத்தில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் வெறும் பேசுபொருளாகவே காணப்பட்டது. நிச்சயம் எமது அரசாங்கத்தில் பாதிப்பற்ற விதத்தில் வடக்கிற்கு தீர்வும் மலையக மக்களுக்கு பொருளாதார தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.