Tamil News
Home செய்திகள்  மட்டக்களப்பில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி வழங்க திட்டம் – மயூரன்  

 மட்டக்களப்பில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி வழங்க திட்டம் – மயூரன்  

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டமாக நாளைய தினம் ஒவ்வொரு சுகாதார திணைக்கள பகுதிகளிலும் ஆபத்து நிலை அதிகமுள்ள பகுதி மக்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு கோவிட் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  மருத்துவர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இன்று  காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாளைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 25000 தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளது. நாளை தொடக்கம் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப் படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 94 கொரோனா  தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் ஐந்து மரணங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தியில் 36வயதுடைய ஏழு மாத கர்ப்பிணி பெண்னொருவரும் அவருடன் இணைந்த குழந்தையும் மரணித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கர்ப்பிணி மரணம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவது பொதுமக்களின் கைகளிலேயே உள்ளது. பொதுமக்கள் நிலைமையினை உணர்ந்து செயற்பட வேண்டும்” என்றார்.

Exit mobile version