Tamil News
Home செய்திகள் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி நீண்டகால அடிப்படையில் இலங்கைக்கு உதவுமா? -சர்வதேச பொருளாதார நிபுணர்...

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி நீண்டகால அடிப்படையில் இலங்கைக்கு உதவுமா? -சர்வதேச பொருளாதார நிபுணர் கருத்து

நீண்ட கால கடன்பேண்தகு தன்மையை அடைவதற்கு இலங்கைக்கு நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் அவசியம் என சர்வதேச பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹங் தெரிவித்துள்ளார்.

சிஎன்பிசிக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிஎன்பிசி மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஆர்ஜென்டீனா, மொன்டிநீக்ரோ போன்ற நாடுகளில் புதிய அரசாங்கத்துக்கு நாணய விடயங்களில் உதவிய ஸ்டீவ் ஹங், இலங்கை நீண்ட கால கடன்பேண்தகு தன்மையை அடைவதற்கு நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

தென்னாசிய நாடு, அதன் தசாப்த கால வரலாற்றில் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அதன் நிதிநிலையை ஸ்திரப்படுத்துவதற்கு கடந்த செப்டம்பரில் இணக்கம் காணப்பட்டதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறவேண்டியுள்ளது.

இந்த நாடுகளில் காணப்படும் விதிமுறைகளையும்  நிறுவனங்களையும் நீங்கள் மாற்றினால் அன்றி, நீண்டகாலமாக காணப்படுகின்ற நிலைமைகள் தொடர்ந்தும் நீடிக்கப்போகின்றன என ஜோன் ஹொப்ஹின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியராக உள்ள ஸ்டீவ் ஹங் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் உயர்மட்டத்தில் நீண்ட காலமாக அதே நபர்களே செயற்பட்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர், ஆகவே எதுவும் மாறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் முதல் இலங்கை உணவு, மருந்து, எரிபொருள், மின்சாரத்துக்கான கடும் போராட்டத்தை சந்தித்து வருகின்றது. இது சீற்றத்துடன் கூடிய ஆர்ப்பாட்டத்துக்கு வழிவகுத்ததுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து தப்பியோடி பதவியை இராஜினாமா செய்யவேண்டிய நிலையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ஆறு தடவை பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றம் பிரதமராக தெரிவு செய்தது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகனின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றிய ஹங் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு நீண்ட கால அளவில்  உதவுமா என்பது குறித்து ஐயம் கொண்டுள்ளார்.

இலங்கை நிவாரணத்துக்காக பல தடவை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1965ஆம் ஆண்டிலிருந்து 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று தோல்வியடைந்த நாடு இலங்கை என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியால் நீங்கள் தற்காலிகமாக நிம்மதியடைய முடியும். ஆனால், நீண்ட காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் பலனளிக்காது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

Exit mobile version