அகிலன்
இந்தியா செய்யப்போவது என்ன: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைப்பதற்காக தமிழ்க் கட்சிகளால் தயாரிக்கப்பட்ட கடிதம் ஒருவாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களால் கையொப்பமிடப்பட்டுள்ளது. இரண்டு மாத காலத்துக்கும் அதிகமாகத் தொடர்ந்த இழுபறிகள், சர்ச்சைகளுக்குப் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது தமிழ்க் கட்சிகளால் தயாரிக்கப்பட்ட ஆவணம் இறுதியாக்கப்பட்டு கையொப் பங்களும் பெறப்பட்டன. கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் மூலமாக இது இப்போது இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படுகின்றது.
ரெலோ முன்னெடுத்த இந்த முயற்சி தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கியமான ஒரு நகர்வு. இலங்கையை மையப்படுத்தி இடம்பெறும் வல்லரசு நாடுகளின் ஆதிக்கப் போட்டியைப் பயன்படுத்தக்கூடிய ஒரு நகர்வு. தேசியக் கட்சிகள் எனச் சொல்லக்கூடிய கட்சிகளைப் பொறுத்தவரையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் இதில் இணைந்திருந்தமை முக்கியமான ஒன்று.
13 ஆவது திருத்தம்
அரசியலமைப்பில் ஏற்கனவே இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுதான் இதன் பிரதான இலக்கு. தற்போதைய சர்வதேச – உள்நாட்டு அரசியல் நிலைமைகளின் அடிப்படையில் நடைமுறைச் சாத்தியமானதும், அவசியமானதும் என்ற அடிப்படையில்தான் இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் காய்நகர்த்துவது என்ற முடிவை ரெலோ எடுத்ததாகத் தெரிகின்றது.
13 ஆவது திருத்தம் தமிழ்க் கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட ஒன்று என்பது உண்மைதான். 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கை மூலமாக 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு மாகாண சபைகள் அமைக்கப்பட்டபோது, விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் தமிழர் தாயகத்தில் இருந்தது. மிகவும் பலமான – உறுதியான கட்டமைப்புக்களை அவர்கள் வைத்திருந்தார்கள். இதற்கான தலைமை அவர்களிடமிருந்தது. மக்களின் ஒட்டுமொத்த ஆதரவை அவர்கள் பெற்றிருந்தார்கள். அந்த நிலையில், இலங்கை – இந்திய உடன்படிக்கையை புலிகள் நிராகரித் திருந்தாலும், இந்தியாவின் நல்லெண்ண முயற்சிகளுக்கு ஆதரவளித்து ஆயுதங்களை கீழே போடுவதாக பிரபாகரன் சுதுமலையில் வைத்து அறிவித்தார்.
தற்போது தமிழ் மக்கள் அந்தளவுக்கு பலமான நிலையில் இல்லை. அதாவது பேரம்பேசும் பலம் ஒப்பீட்டளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. பலமான ஒரு தலைமை தமிழ் மக்களிடம் இல்லை. இந்தியப் பிரதமருக்கான கடிதத்தைத் தயாரிக்கும் விவகாரத்திலேயே இதனைத் தெளிவாகக்காண முடிந்தது. உண்மையில் இது தமிழர்களுக்கு மட்டும் பிரச்சினையாக இருக்கவில்லை. இந்தியாவுக்கும் பிரச்சினையாக இருந்தது. அதாவது, பலமான தமிழ்த் தலைமை ஒன்றில்லை என்ற நிலையில், இலங்கையைக் கையாள்வதில் புதுடில்லியும் தடுமாறியது.
தமிழரசு – ரெலோ
அரசியல் ரீதியாக இலங்கையைக் கையாள வேண்டுமானால், பலமான ஒரு தமிழர் தலைமை – ஒன்றிணைந்த குரலில் கோரிக்கையை முன்வைக்கக்கூடிய தலைமை அவசியம் என புதுடில்லி கணக்குப் போட்டது. பல சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் அதனை அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால், தமழரசுத் தலைமையைப் பொறுத்தவரையில் அதற்கான முன்னெடுப்பு ஒன்றைச் செய்யக்கூடிய நிலையில் அது இருக்கவில்லை.
சுமந்திரனை முன்னிலைப்படுத்தாமல் இவ்வாறான ஒரு முயற்சியை தமிழ்க் கட்சிகள் இணைந்து முன்னெடுத்திருப்பது இதுதான் முதல்முறை என்பது கவனிக்கத்தக்கது.
சுமந்திரன் உரை
ரெலோ முன்னெடுத்த இந்த முயற்சியின் முதலாவது கூட்டம் நவம்பர் முதல்வாரம் யாழ்ப்பாணத்திலுள்ள திண்ணை ஹொட்டலில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதாக உறுதியளித்திருந்த தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா இறுதி நேரத்தில் இதில் கலந்துகொள்வதைத் தவிர்த்தார். தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருந்த எதிர்ப்புக்கள்தான் இதற்குக் காரணம்.
மலையக முஸ்லிம் கட்சிகள்
மலையக, முஸ்லிம் கட்சிகளையும் இந்த நகர்வில் இணைத்துக்கொண்டமை எதிர்பார்க்கப்பட்டதைப் போல விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. பொதுவான நிலைப்பாட்டில் அந்தக் கட்சிகள் இணைந்துகொண்டாலும், வடக்கு, கிழக்கை தாயகமாகக் கொண்ட மக்களுடைய பிரச்சினைகளிலிருந்து மலையக, முஸ்லிம் மக்களுடைய பிரச்சினைகள் வேறுபட்டவை. அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கியதாக பொதுவான ஆவணம் ஒன்றை தயாரிப்பதில் உள்ள பிரச்சினைகள் புரிந்துகொள்ளப்படவேண்டிவை.
இந்த நிலையில்தான் அந்த இரண்டு கட்சிகளையும் உள்ளடக்காமல் இந்த ஆவணம் கைச்சாத்தாகியிருக்கின்றது. ஆனால், பொதுவான விடயங்களில் இணைந்து செயற்பட வேண்யதன் அவசியம் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றது. இந்த முயற்சி இதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேவேளையில், ஹக்கீமைப் பொறுத்தவரையில் அவர் எதிர்கொள்ளும் உட்கட்சிப் பிரச்சினையும் தமிழ்க் கட்சிகளுடன் அவர் இணைந்து செயற்பட முடியாமைக்கு மற்றொரு காரணம்.
இந்தியா என்ன செய்யும்?
இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவின் கரங்கள் இப்போது மேலோங்கியிருப்பது தெரிகின்றது. இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார – அந்நியச் செலாவணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா கைகொடுத் திருக்கின்றது. அதற்குப் பிரதியுபகாரமாக திருமலையிலுள்ள மேலும் சில எண்ணெய்க் குதங்களை 50 வருட குத்தகைக்கு இந்தியாவுக்குக் கொடுப்பதற்கு இலங்கை இணங்கியிருக்கின்றது.
இந்தப் பின்னணியில் தமிழ்க் கட்சிகள் பொதுவான கோரிக்கை ஒன்றில் இணங்கிவந்து ஐக்கியமான தமது நிலைப்பாட்டை இந்தியாவிடம் வெளிப்படுத்தி யிருப்பது புதுடில்லிக்கு அரசியல் ரீதியாக பலத்தைக் கொடுத்திருக்கின்றது. இந்த நிலையில், புதுடில்லியின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும்?
- இலக்கு மின்னிதழ் 164 ஜனவரி 08, 2022 | Weekly Epaper
- ஈழத் தமிழர்களின் துயரங்களைத் தீர்க்க வேண்டியது எங்கள் தாய்த் தமிழகத்தின் கடமை – வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஸ்ணன்
- “இனவெறி ஒரு பாவம். அது கடவுளின் விருப்பத்துக்கு எதிரானது” டெஸ்மன்ட் ரூட்டு – தமிழில் ஜெயந்திரன்