புதிய தொழில்நுட்பங்கள் பரீட்சிக்கும் களமாகும் உக்ரைன்
உக்ரைன் ரஸ்ய போர் இன்று 23 ஆவது நாளாக தொடர்கின்றது. ரஸ்யாவை வீழ்த்துவதற்கு உக்ரைன் மக்களை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி மேற்குலகம் தன்னிடம் உள்ள அத்தனை வளங்களையும் கூட்டாக களமிறக்கியுள்ளது.
ஜவலின், எரி-4 போன்ற மிக நவீன தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும், ஸ்ரிங்கர், Starstreak anti-aircraft missile, சாம்-8, சாம்-14 போன்ற ரஸ்யத் தயாரிப்பான பெருமளவான ஏவுகணைகளையும் உக்ரைன் படையினருக்கு அள்ளி வழங்கி வருவதுடன், செய்மதிகள் மூலமும், உக்ரைனுக்கு அருகில் உள்ள நேட்டோ நாடுகளின் படைத்தளங்களுக்கு நகர்த்தப்பட்ட தனது வான்படை விமானங்கள் மூலமும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் உக்ரைன் படையினருக்கு ரஸ்யாவின் படை நகர்வுகள் தொடர்பில் தகவல்களை வழங்கி வருகின்றன.
அது மட்டுமல்லாது, ஒய்வுபெற்ற படை அதிகாரிகளையும், சிறப்பு படையினரையும் உக்ரைனின் பாதுகாப்பான பகுதி எனப்படும் மேற்கு பகுதிக்கு அனுப்பி, அங்கிருந்து பயிற்சிகளையும், தாக்குதல் திட்டங்களையும் வகுத்து வழங்கி வருவதுடன், தம்மால் வழங்கப்படும் ஆயுதங்களையும் அங்கு வைத்து விநியோகித்து வருகின்றனர்.
போலந்தின் எல்லையில் இருந்து 15 மைல்கள் தொலைவில் இருந்த இவ்வாறான தளங்களில் ஒன்றைத்தான் கடந்த 13 ஆம் நாள் ரஸ்யாவின் ஏவுகணைப் படை தாக்கி அழித்திருந்தது. தாக்குதல் இடம்பெற்ற சமயம் அங்கு 1000 இற்கு மேற்பட்ட மேற்குலக மற்றும் உக்ரைன் படையினர் தங்கியிருந்தனர். கலிபர் மற்றும் கே.எச்-555 வகையான 30 ஏவுகணைகள் வீழந்து வெடித்ததாகவும், இந்த தாக்குதலில் 35 பேர் கொல்லப் பட்டதுடன், 135 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ள போதும், அதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 இற்கும் அதிகம் என மேற்குலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
3 பிரித்தானியாவின் சிறப்புப் படையினரும் பல அமெரிக்கப் படையினரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 180 பேர் கொல்லப்பட்டதுடன், பல நூறு பேர் காயமடைந்துள்ளதாகவும், மேற்குலகம் வழங்கிய பெருமளவான ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ரஸ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் படையினருடன் இணைந்து போரிடுவதாக தெரிவித்து பல நாடுகளில் இருந்து சென்றவர்களில் ரஸ்ய உளவாளிகளும் ஊடுருவியதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் படையினரின் ஆயுதங்களை களைவது மற்றும் அவர்களின் போரிடும் வலுவை இல்லாது செய்வது என்பனவும் ரஸ்யா மேற்கொண்டுள்ள சிறப்புப் படை நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்று. ரஸ்யா அதனை மெல்ல மெல்ல நிறைவேற்றி வருகின்றது. உக்ரைனின் வான்படையின் பலத்தை கணிசமாகக் குறைத்துள்ள ரஸ்யா, தற்போது அவர்களின் ஆயுத உற்பத்தி நிலைகளையும் தாக்கி அழித்து வருகின்றது. சைரோமியர் தாங்கி உற்பத்தி நிலையத்தை கடந்த 6 ஆம் நாள் தாக்கி அழித்துள்ளது.
போர் ஆரம்பமாகிய நாளே உக்ரைனின் பேர்டன்ஸ் துறைமுகத்தை கைப்பற்றியதுடன், கடற்படையின் 10 கடற்படை கப்பல்களை ரஸ்யா கைப்பற்றியது, அதனைத் தொடர்ந்து உக்ரைன் கடற்படையினர் தமது மிகப்பெரும் Krivak III-class frigate எனப்படும் போர்க் கப்பலை மக்கலேவ் துறைமுகத்தில் வைத்து தகர்த்து விட்டனர்.
அது மட்டுமல்லாது உக்ரைன் படையினரின் சிறப்பு படை பிரிவான அசோவ் படைப்பிரிவு (Azov Battalion) முற்றாக மரியபோல் பகுதியில் வைத்து சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இந்த முற்றுகையை அவர்கள் உடைக்கத் தவறினால் அவர்களின் சிறப்பு படையணி முற்றாக அழிந்துபோகும் நிலை ஒன்று உருவாகியுள்ளது. இந்த படை அணியை அழிப்பதும் ரஸ்யாவின் நோக்கங்களில் ஒன்று.
ஒரு விமானத்தை வீழ்த்துவதற்கு 10 இற்கு மேற்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஒரேசமயத்தில் ஏவும் புதிய உத்தியை அவர்கள் கையாண்டுவருகின்றனர். அவ்வாறு ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று இந்த வாரம் ரஸ்யாவின் எஸ்யூ-25 தாக்குதல் விமானத்தை தாக்கியபோதும் ஒரு இயந்திரத்தின் உதவியுடன் அதனை பெலாரூஸில் உள்ள தளத்தில் விமானி தரையிறக்கியது அந்த விமானத்தின் தப்பிப் பிழைக்கும் திறன் தொடர்பில் மதிப்பை உயர்த்தியுள்ளதாக படைத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, 2015 ஆம் ஆண்டு சிரியாவில் களமிறங்கியபோது 320 இற்கு மேற்பட்ட தனது புதிய ஆயுதங்களை பரீட்சித்து பார்த்த ரஸ்யா தற்போது உக்ரைன் போரிலும் புதிய ஆயுதங்களை பரீட்சிக்க ஆரம்பித்துள்ளது.
ஐக்கன்டர் எம் (Iskander-M) எனப்படும் 500 கி.மீ தூரவீச்சுக் கொண்ட ஏவுகணைகளில் எதிரிகளின் ஏவுகணை தடுப்பு பொறிமுறைகளை குழப்பும் சிறிய வகை ஏவுகணைகளை பொருத்தி (Decoy systems) ஏவும் புதிய தொழில்நுட்டபத்தை ரஸ்யா இந்த வாரம் பரீட்சித்து பார்த்துள்ளது.
முதலில் இதனை கொத்தணிக் குண்டுகள் என தவறாக நினைத்த மேற்குலக படை நிபுணர்கள் தற்போது இந்த தொழில் நுட்பத்தை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர். சிறிய ஏவுகணைகள் அதிக வெப்பத்தை வெளியிடுவதுடன், ராடர் அலைகளையும் குழப்பும் திறன் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
- அதிகரிக்கும் மக்கள் அதிருப்தியை எதிரணி எவ்வாறு பயன்படுத்தும்? அகிலன்
- போராட்டம் போதித்துள்ள அரசியல் பாடம் | பி.மாணிக்கவாசகம்
- எல்லை மீறும் எல்லை தாண்டலால் சாவின் விளிம்பில் வடக்கு மீனவர்கள்! | தாயகத்தில் இருந்து இரா.ம.அனுதரன்