காவல்துறை துப்பாக்கிச்சூடு 16 பேர் மருத்துவமனையில்
அம்பாறையில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் இடம்பெற்ற முரண்பாட்டில் 16 பேர் வரையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிழக்கு மாகாணாம், அம்பாறை – பாலமுனை பகுதியில், காவல்துறை வீதித்தடையில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதி வழியாக தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் வாய்த்தர்க்கம் மோதலாக உருவாகியதாக கூறப்படுகின்றது.
இதன் போது சம்பவ இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
அக்கரைப்பற்று காவல் நிலைய பொறுப்பதிகாரி ஊடகவியலாளர் உட்பட் 10 இற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பொதுமக்கள் என 16 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஆராய கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் சட்டத்தரணி கமல் சில்வா உள்ளிட்ட காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் விசாரணையினை முன்னெடுத்து வருகின்றனர்.