Tamil News
Home செய்திகள் தமிழ்க் கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும்; வலியுறுத்துகிறார் கஜேந்திரகுமார்

தமிழ்க் கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும்; வலியுறுத்துகிறார் கஜேந்திரகுமார்

13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ள ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே. அவ்வாறெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஜனாதிபதி-தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சந்திப்பில் இனப்பிரச்னைக்கான இறுதித் தீர்வு தொடர்பில் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடக்கவில்லை என்பது ஊடகங்கள் மூலம் உறுதியாகின்றது.

அதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கத்திலிருந்து 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான அழுத்தங்கள் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிப்படுத்துகின்றன. இது சம்பந்தமாக நாம் தெரிவித்து வந்த கருத்துக்கள் மீண்டும் மீண்டும் உறுதியாவதாகவே கருதுகிறோம்.

கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழர்களை தடை செய்த அரசு தற்போது பொருளாதார நெருக்கடி எழுந்துள்ளபோது அந்த புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கின்றது. புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையை நீக்குவதற்குக்கூட அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி உள்ளது. இது எதை காட்டுகிறது என்றால், தடை என்பது இலங்கை அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயம் அல்ல என்பதே ஆகும்.

13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே! அவ்வாறெனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறவேண்டும் என்றார்.

Exit mobile version