மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடாவில் உள்ள விகாராதிபதியை(பௌத்த மத குரு) இடமாற்றக்கோரி அப் பகுதியில் வசிக்கும் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
புன்னக்குடா பகுதியில் உள்ள புன்னியாராஜ விகாரையின் விகாராதிபதி தம்பக்கல வனரத்ன தேரர், கடந்த சில மாதங்களுக்கு முன் குறித்த விகாரையில் சிறுவன் ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தமக்கு விகாராதிபதி தேவை இல்லை எனவும் வழிபாட்டிற்கு விகாரைக்கு செல்ல பிள்ளைகள் அச்சப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
புன்னக்குடா பகுதியில் சுமார் 20 சிங்கள குடும்பங்கள் கடல் பிரதேசத்திற்கு அருகில் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த மத குருவுக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கறுப்பு கொடிகளையும் கையில் தாங்கி இருந்தனர். பாலியல் குற்றச்சாட்டில் கைதான பௌத்த மத குருவை இடமாற்றம் செய்யும்படி கோரிக்கை விடுத்தனர்.
இதில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரனும் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.