இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பதன் காரணமாக திருமண நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மன்னாரில் திருமண நிகழ்வுகளை ஒழுங்கு செய்த பல குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் பின்னர் சற்று தளர்த்த ப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் அரசினால் மீண்டும் இறுக்கமடையச் செய்து இரவு நேர ஊரடங்கு அமுலில் உள்ளதுடன், திருமணங்கள் மற்றும் களியாட்ட நிகழ்வுகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அனுமதிகள் எடுக்கப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்ட திருமண நிகழ்வுகளுக்கு தேவையான உணவு பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் பல ஆயிரம் ரூபாய் செலவில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் சுகாதாரத் துறையால் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருமண நிகழ்வுகளை ஒழுங்கு செய்த குடும்பங்கள் பாரிய கடன் சுமையில் தள்ளப் பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.
இதேவேளை, 9 நபர்கள் உள்ளடக்கிய பதிவு திருமணங்களை மேற்கொள்ள முடியும் என்று சுகாதார துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.