எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் இன்னுமொரு தொகுதி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குத் தாயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம் பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
“கைதிகள் தொடர்பில் எடுத்த முயற்சி காரணமாக 16 கைதிகளை அண்மையில் விடுதலை செய்திருக்கிறோம். இதன் பணி மேலும் தொடரும். எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் இன்னுமொரு தொகுதி கைதிகளை விடுதலை செய்வதற்கு தாயாராக இருக்கிறோம். அவர்கள் விடுதலை பெறவேண்டும்.
அவர்கள் பிழை செய்திருக்கலாம். அவர்கள் கொண்ட நோக்கத்துடன் அவர்கள் செய்தது அரசுக்கோ அல்லது நீதிக்கோ பிழையாக இருக்கலாம். ஆனால் போர் முடிந்து 11 வருடங்களிற்கு பின்னர் பொது மன்னிப்புக் கொடுத்து அவர்கள் வாழ வழிவிடப்பட வேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவன் நான். அத்துடன் காணாமல் போனோர் தொடர்பாக பாராளுமன்றத்தில் புதிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்.