Home செய்திகள் நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு- சம்பவ இடத்தில் பெண்பலி

நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு- சம்பவ இடத்தில் பெண்பலி

IMG 20211215 WA0021 நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு- சம்பவ இடத்தில் பெண்பலி

வவுனியா நெடுங்கேணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார். 

இன்று (15) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – நெடுங்கேணி – சேனைப்பிலவு பகுதியில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணை வழிமறித்த நபர் ஒருவர் அவர் மீது நாட்டுத் துப்பாக்கியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனால் சம்பவ இடத்தில் பெண் பலியாகியுள்ளார்.

குறித்த பெண் விவசாய காணியிலிருந்து உணவருந்துவதற்காக வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது வீட்டுக்கு அண்மித்த பகுதியில் வைத்து குறித்த சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் 34 வயதுடைய பாலசுந்தரம் சத்தியகலா என்ற பெண்ணே மரணமடைந்துள்ளார். அதே பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே குறித்த பெண்ணை சுட்டதாக பிரதேசவாசிகள் சந்தேகம் தெரிவிப்பதுடன், தாக்குதலை மேற்கொண்ட இளைஞனை அந்தப்பகுதியில் அவதானித்ததாக குறித்த பெண்ணின் தாயார் தெரிவித்தார்.

குறித்த நபர் ஏற்கனவே கொலை வழக்கில் சிறையில் இருந்து மீள வந்தவர் என்றும் அந்தப்பெண்ணை கொலை செய்வதாக பலமுறை அச்சுறுத்தல் விடுத்து வந்ததாகவும் தெரிவித்த உறவினர்கள், இதனை காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமையே இக் கொலைக்கு காரணம் எனவும் கவலை தெரிவித்தனர்.

இதையடுத்து நெடுங்கேணி காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version