தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த இளைஞனையும், அவரது மனைவியையும் பொன்னாலை பாலப்பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்கு அருகில் வைத்து, வன்முறைக் கும்பல் ஒன்று இரண்டு கார்களில் கடத்திச் சென்றிருந்தது.
அதன்பின்னர் இளைஞன் மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். கடத்திச் சென்ற இளைஞனின் மனைவியை சித்தன்கேணி பகுதியில் இறக்கி விட்டு வன்முறைக் கும்பல் தப்பிச் சென்றிருந்தது. வன்முறைக் கும்பல் தம்மை வழிமறித்துத் தாக்கி கடத்த முற்பட்டவேளை, தாம் உதவி கோரி பொன்னாலை கடற்படை முகாமுக்குச் சென்ற வேளை அங்கிருந்த கடற்படையினர் தம்மைத் தாக்கி விரட்டினர் என்றும், தனது கணவரின் படுகொலைக்குக் கடற்படையினரும் காரணம் என்றும் படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் மனைவி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வன்முறைக் கும்பலில் நால்வரைக் கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், கடற்படை முகாமில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா காணொளிகளைப் புலனாய்வாளர்கள் பெற்று விசாரணைகளை முன்னெடுத்தனர். அந்தக் காணொளியில் இளைஞனும் மனைவியும் தஞ்சம் கோரி கடற்படை முகாமுக்கு ஓடி வருவதும், அங்கு கடற்படையினர் அவர்களைத் தாக்குவதும், வன்முறைக் கும்பல் கடற்படையின் கண் முன்னே முகாம் பகுதியில் வைத்தே கணவன், மனைவியைக் கடத்தி செல்வதும் பதிவாகியுள்ளது.
கடற்படையினர் துப்பாக்கிகளுடன் கடத்தல்காரர்களுக்கு உதவி செய்வது காணொளியில் தெளிவாகப் பதிவாகியுள்ள நிலையில் கடத்தலுக்குக் கடற்படையினர் உதவினார்கள் என்ற மனைவியின் குற்றச்சாட்டுக்கு காணொளி வலுச் சேர்த்துள்ளது.