Tamil News
Home செய்திகள் சுற்றுலா கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்க முடியாது – வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர்

சுற்றுலா கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்க முடியாது – வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர்

அக்கறை சுற்றலா கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை உடனடியாக ஏற்க முடியாது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

“அரச காணிகள் தொடர்பான அதிகாரம் மத்திய அரசில் காணப்படினும், அக்காணி உள்ளூராட்சி மன்றத்தின் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்டிருப்பதால், எனது அனுமதியின்றி காணியை வழங்க முடியாது. அத்துடன் இராணுவமயப்படுத்தலையும் ஏற்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆட்சியில் உள்ள அக்கறை சுற்றுலா மையத்தில் கடற்படையினருக்கு காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு  பிரதேச செயலகத்தினூடாக கடிதம் மூலம் பிரதேச சபைக்கு அறிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் இடைக்காடு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள அக்கறை பிரதேசத்தில் கடற்படை கண்காணிப்பு மையத்தினை நிறுவுவதற்கு கடற்படையினர் பிரதேச செயலகத்திடம் 20 பேர்ச் காணியை கோரியுள்ளனர்.

அதற்கமைய கடற்படை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தங்களால் சுற்றுலா வலயமாக ஆட்சிப்படுத்தப்பட்டுள்ள காணியில் இரண்டு பரப்பினை கடற்படை கண்காணிப்பகம் அமைக்க வழங்குவதாகவும் பிரதேச செயலகம் பிரதேச சபைக்கு கடிதம் மூலம் இவ்வாரம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரியான தவிசாளர், உள்ளூராட்சி மன்றத்துக்கு உரிய முடிவுகளை எடுப்பது தொடர்பாக தவிசாளர் என்ற முறையில் சபையின் நிறைவேற்று அதிகாரியான தனக்கே அதிகாரம் உண்டு என்பதை பிரதேச செயலாளருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எது எப்படியிருப்பினும், படைத்தரப்புக்கு காணியை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளதோடு, பிரதேச செயலகத்தினால் கடற்படையினருக்கு காணி வழங்க எடுக்கப்பட்டுள்ள முடிவை உடனடியாக நிறுத்துமாறும் பிரதேச செயலருக்கு கடிதத்தினூடாக அறிவித்துள்ளார்.

இக்கடிதத்தின் பிரதிகள் ஆளுநர், அரச அதிபர், மாகாண காணி ஆணையர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த காணி பிரதேச சபையினால் காலாகாலமாக சுற்றுலாத்துறைக்கென மில்லியன் கணக்கில் முதலீடு செய்யப்பட்டு  எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்காவை உள்ளடக்கியதாக அக்கறை கடற்கரை மக்கள் பாவனையில் உள்ளது. அவ்வாறான பிரதேசத்தில் பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரியான தனக்கோ அல்லது பிரதேச சபைக்கோ எவ்வித அறிவிப்புகளும் இன்றி வெளிப்படைத் தன்மையற்ற முறையில் கிராம சேவையாளர், கடற்படையினர் சென்று இரகசியமாக பார்வையிட்டுள்ளனர்.

இது அரச நிர்வாகத்துக்கு இருக்கவேண்டிய வெளிப்படை தன்மையினையும் சட்ட ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சுற்றுலா வலயமொன்றை இராணுவமயமாக்குவது அபிவிருத்திக்கு முரணான விடயமாகும் எனவும் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையும் மீறி அதிகாரிகள் நடந்துகொள்வார்களாயின், தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஒரு புறத்தில் அரசாங்கம் படைத்தரப்பினரிடம் உள்ள நிலங்களை விடுவிப்பதாகவும் மறுபுறத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை மீறி அவர்களுக்கு சொந்தமான காணியை படைத்தரப்பின் தேவைகளுக்காக அபகரிப்பதாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version