Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் மாவீரர்கள் ஈழத்தமிழர்களின் மக்களாணை நடைமுறையரசாக மாறத் தங்களையே ஈகமாக்கியவர்கள் | ஆசிரியர் தலையங்கம் | Weekly...

மாவீரர்கள் ஈழத்தமிழர்களின் மக்களாணை நடைமுறையரசாக மாறத் தங்களையே ஈகமாக்கியவர்கள் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 262

மாவீரர்கள் ஈழத்தமிழர்களின் மக்களாணை
நடைமுறையரசாக மாறத் தங்களையே ஈகமாக்கியவர்கள் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 262

உலக வரலாற்றிலே ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவைத் தங்களின் வரலாற்றுத் தாயகமாகக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரை தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் மூத்த இனங்களில் தொன்மையானவர்கள்.
பிரித்தானிய கீழைத்தேயக் கம்பெனி 1796 இல் ஈழத்தமிழர்களின் இறைமையைத் தமதாக்கி ஆட்சி யைத் தொடங்கிய பொழுது தமிழ் இந்துமாக்கடல் வணிக மொழியாக இருந்த வரலாற்றின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் தொன்மையை உணர்ந்து தமிழகத்தின் சென்னையில் இருந்தே இலங்கை முழுவதையும் ஒரே பொதுச் சட்டத்தின் கீழும் ஒரே நிதியின் பயன்பாட்டுடனும் தமிழகத்துடன் சேர்த்தே 1802 வரை ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். இது இலங்கை முழுவதிலும் ஈழத்தமிழரின் இறைமையின் பரந்து பட்ட இருப்புக்குச் சான்றாக அமைந்தது. அத்துடன் தமிழக மக்களினதும் ஈழத்தமிழர்களினதும் தொப்புள் கொடி உறவுக்கும் சான்றாகியது. இனத்தால் ஒன்றுபட்டவர்கள் உலகமெங்கும் தமிழர்கள் என்பதற்கான வரலாற்றுச் சான்றிது.
1802 இல் இலங்கை பிரித்தானிய முடிக்குரிய தனியான நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் 1815இல் தெலுங்குத் தமிழர்கள் முடிமன்னர்களாக இருந்த சிங்கள மக்களின் கண்டி அரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் 1832ம் ஆண்டு வரை ஈழத்தமிழர்களின் வன்னியரசின் 1832 ம் ஆண்டு வீழ்ச்சிக்குப் பின்னரே 1833இல் இலங்கையை கோல்புறூக் கமரோன் அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் ஈழத்தமிழர்களதும் சிங்களவர்கள தும் விருப்புப் பெறப்படாது, தாங்கள் தனியரசுகளாகக் கைப்பற்றிய தமிழ் சிங்கள அரசுக்களின் எல்லைகளை ஒன்றாக்கித் தங்களின் சந்தை மற்றும் இராணுவ நலன்களுக்காக இலங்கை என்ற ஒற்றையாட்சி நாட்டை உருவாக்கி 1948ம் ஆண்டுவரை 115 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனர். ஆயினும் கோப்புறூக் கமரோன் அரசி யலமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட முதலாவது சட்டவாக்க சபையில் தமிழருக்கும் சிங்களவருக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டமை ஈழத்தமிழரின் தேச இனத்தன்மையை பிரித்தானியா வெளிப்படுத்திய வரலாறாக உள்ளது.
04.02.1948 இல் 115 ஆண்டுகளாக தாங்கள் ஆண்டு உருவாக்கிய ஒற்றையாட்சி இலங்கைக்குச் சுதந்திரத்தை வழங்குகையில் தாங்கள் ஈழத்தமிழர்களின் விருப்பைக் கோராது உருவாக்கிய சிங்களப் பெரும் பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சிக்குள் சுதந்திரத்தை வழங்கினர். இதனை அக்காலத்து ஈழத்தமிழர்களின் அரசியலில் தனிப்பெரும் தலைவராக விளங்கிய அமரர் சட்டத்தரணி ஜி.ஜி. பொன்னம்பலம் சோல்பரி அரசியல் அமைப்பு குறித்துக் காலனித்துவச் செயலாளர் ஹோல் அவர்களுக்கு 03.11.1945 இல் அனுப்பிய CO. 54/987/இல.96 மனுவின் மூலம் வெளிப்படையாக எதிர்த்தார். இதில் ஈழத்தமிழர்க்கும் அப்பொழுது இலங்கையில் தொழிலுக்காக வாழ்ந்து கொண்டிருந்த 750000 இந்தியத் தமிழரில் 80 வீதமானவர்கள் இலங்கையில் பிறந்தவர்களாகவும் நிரந்தரமாக வாழ்பவர்களாவும் உள்ளனர் என அவர்களின் இலங்கைக் குடிமை குறித்தும் குரல் எழுப்பியிருந்தார். அதே நேரத்தில் 15.01.1946ம் திகதிய முன்மொழியப்பட்டிருந்த சோல்பரி அரசியலமைப்புக் குறித்து இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் இணைச் செயலாளர் எஸ் சிவசுப்பிரமணியம் பிரித்தானியாவின் அக்காலப் பிரதமர் அட்லி அவர்களுக்கு அனுப்பிய CO.54/986/9/1/ இல.09 மனுவில் போர்க்காலத்தில் பிரித்தானிய அரசு வழங்கிய தன்னாட்சி அரசு தரப்படும் என்ற வாக்குறுதியை மனதிருத்தி சிறுதேச இனமாக உள்ள ஈழத்தமிழர்களுக்கான தன்னாட்சி அரசாங்கத்தை வலியுறுத்தி சோல்பரி அரசியலமைப்பை நிராகரித்திருந்தார்.
இதற்கு முன்னர் 01.09.1944ல் இல் திருகோணமலையில் பிரித்தானிய கடற்படையின் வைத்தியராக விளங்கிய தமிழகத்தின் தென்ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் எஸ் பொன்னையா அக்காலத்தில் காலனித்துவச் செயலாளராக விளங்கிய ஸ்ரான்லிக்கு அனுப்பிய CO. 54/986/ 7/ இல. 35 மனுவில் “தமிழ் இலங்கைக்கும் மீதி இலங்கைக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை வலியுறுத்தித் தமிழ் இலங்கையைத் தனியான அரசாக பிரித்தானியா சுதந்திரம் வழங்க வேண்டும் என அழுத்தமாகக் கோரியிருந்தார். இவைகள் எல்லாம் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை என்பது அவர்களின் இறைமையின் அடிப்படையில் அவர்களின் தாயகத்தைத் தேசியத்தை நிர்ணயிக்கும் பிரச்சினை என்பதையும் இது காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினை என்பதால் ஐக்கிய நாடுகள் சபையால் தீர்க்கப்பட வேண்டிய அனைத்துலகப் பிரச்சினையாக உள்ள தென்பதையும் உலகுக்கு மிகத் தெளிவாக்குகின்றன.
இந்நிலையில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கு ஈழத்தமிழர்களின் தாயகம் மீளவும் அவர்களுடைய ஆட்சிக்குட்பட வேண்டுமென்ற நிலை சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்றக் கொடுங்கோன்மை ஆட்சி 1948இல் இருந்து 1972 வரை அரசபயங்கரவாதத்துடன் கூடியதும் படைபலம் மூலமா னதுமான இனஅழிப்புக்களை ஈழத்தமிழர்கள் மேல் 1956 முதல் 1972 வரை நடாத்திய வரலாறு தோற்றுவித்தது. 22.05. 1972இல் பிரித்தானிய காலனித்துவம் ஈழத்தமிழர்களின் இறைமையைச் சிங்களவர்களின் இறைமையுடன் ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சியில் செயற்பட அளித்த சோல்பரி அரசியலமைப்பின் 29(2) அரசியலமைப்புப் பாதுகாப்பு மீறப்பட்டுத் தனிச்சிங்கள பௌத்த நாடாக இலங்கைத் தீவை ஆட்சிப்படுத்தும் சிறிலங்கா சிங்கள பௌத்த சோசலியக் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டதால் ஈழத்தமிழர் அரசற்ற தேசஇனமாகத் தங்களின் வரலாற்றுத் தாயகத்தில் மீளவும் தங்களின் பாதுகாப்புக்கான அரசை தோற்றுவிக்க வேண்டிய வரலாற்றுத் தேவை தோன்றியது. இந்த ஈழத்தமிழர்களின் நடைமுறையரசு அவர்களின் தேசியத் தலைவரான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தலைமையில் 31 ஆண்டு காலம் உலக வரைபடத்தில் இலங்கைத் தீவில் இரண்டு அரசுக்கள் என்ற அதன் வரலாற்றுத் தன்மையுடன் செயற்படுவதற்கு தங்கள் உயிரால் உத்தரவாதம் அளித்தவர்கள் தான் ஈழத்தமிழர்களின் மாவீரர்கள்.
மாவீரர்கள் ஈழத்தமிழர் தாயகத்தின் குடிமக்கள். தங்கள் மக்களின் 1977ம் ஆண்டு தனியான அரசே தங்களின் பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கு ஒரேவழி என்ற குடியொப்ப மக்களாணையில் இந்த சனநாயக ரீதியான ஈழத்தமிழர்களின் முடிவைச் சிறிலங்கா ஏற்க மறுத்தால் எந்த வழிகளிலும் அதனை அடைவோம் என்ற ஈழத்தமிழ் மக்களின் உறுதியை நடைமுறைப்படுத்த தங்களின் உயிரைத் தலைவனின் விடுதலைப் போருக்கு பக்கபலமாக அமைத்தமை தான் இன்று உலக ஆய்வாளர்கள் விடுதலைப்புலிகள் படைபலம் கொண்டல்ல மக்கள் பலம் கொண்டே தங்களுக்கான ஆட்சி அதிகாரத்தைப் பெற்றனர் எனப் பல ஆய்வாளர்கள் பல்கலைக்கழக மட்டத்தில் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் மக்கள் போராட்டம் என்ற உண்மையை உலகுக்கு சான்றாதரங்களுடன் வெளிப்படுத்த உதவுகிறது. இதில் நெதர்லாந்தின் Utrecht Unicersity Professor Dr. Georg Frerks மற்றும் Radboud University Assistant Professor Niels Terpsta மற்றும் கனடாவின் முனைவர் பட்ட ஆய்வாளர் விவிதா தம்பிநாதனின் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதை அடைவதற்கான ஆய்வுமுறையியல் மீள்குடியேற்றமடைதல் போன்ற பல முக்கிய இளம் ஆய்வாளர்களின் ஆய்வுகளின் வெற்றிக்கு மாவீரர்கள் மக்கள் தேசமாக எழுந்ததே தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் என்பதை உண்மையுடனும் நேர்மையுடனும் அவர்களால் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த உண்மையை அனைத்து ஈழத்தமிழரும் நெஞ்சிருத்தி சனநாயக வழிகளில் தேசமாக எழுவதன் மூலமாக எழ வேண்டும். இதற்கு ஈழத்தமிழர்களின் பண்பாட்டு மீட்டுணர்வு மீளவும் கலை இலக்கியங்கள் வழி மீளவும் கட்டியெழுப்பப் பட வேண்டும். பொங்கு தமிழ் மீளவும் உலகளாவிய ஈழத்தமிழர்களின் சனநாயக எழிச்சியாக எழ வேண்டும். இவையே மாவீர்களின் ஈழத்தமிழர் தாயக இறைமையும் தேசிய வாழ்வும் தன்னாட்சி பாதுகாப்பும் நடைமுறைச்சாத்தியமாவதற்கு தாயகத் தமிழரும் அனைத்துலகத் தமிழராக உள்ள தமிழர்களும் செய்ய வேண்டிய இன்றைய தாயகக் கடமையாக உள்ளது என்பது இலக்கின் எண்ணம்.

Exit mobile version