Home செய்திகள் மனித உரிமை, மனித நேயம் இந்த நாட்டில் தொலைந்து விட்டது-மட்டக்களப்பு-அம்பறை மறை மாவட்ட ஆயர்

மனித உரிமை, மனித நேயம் இந்த நாட்டில் தொலைந்து விட்டது-மட்டக்களப்பு-அம்பறை மறை மாவட்ட ஆயர்

மனித நேயம் இந்த நாட்டில் தொலைந்து விட்டது

மனித உரிமை, மனித நேயம் இந்த நாட்டில் தொலைந்து விட்டது என மட்டக்களப்பு-அம்பறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.

நாட்டினை பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் ஏனைய அழிவுகளிலிருந்து பாதுகாத்தருளும் பல்லின,பல்சமய மக்கள் ஒற்றுமையுடனும அமைதியுடனும் வாழும் நிலையினை ஏற்படுத்தவேண்டி பிரார்த்தனையுடன் கூடிய அமைதிப்போராட்டம் இன்று  மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

எகட் ஹரிதாஸ் அமைப்பின் பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலயத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு-அம்பறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கத்தோலிக்க,  மெதடிஸ்த, முஸ்லிம், இந்து மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

முறையான பொருளாதார கொள்கையினை நடைமுறைப்படுத்து,சுரண்டலை இலஞ்சத்தினை ஒழி,ஊழலை வீண்விரயத்தினை ஒழி,மனித இன சகவாழ்வினை பேணு,மனித உரிமையினை மதி,மனித மான்பினை மதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை தாங்கியவாறு பிரார்த்தனை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை,
இந்த நாடு ஒரு இக்கட்டான நிலையினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.ஒரு அமைதியில்லை,சமாதானமில்லை,மக்கள் மத்தியில் மகழ்ச்சியில்லை,எல்லாரும் வாழ்விலும்சோகம் நிறைந்திருக்கின்றது.

இதற்கு அடிப்படை காரணம் எம்மை ஆண்டவர்கள்,எம்மை ஆண்டு கொண்டிருப்பவர்கள்,இனி ஆளப்போகின்றவர்கள் மக்கள் நலனில் அக்கரைகொள்ளவில்லை. அதன்காரணமாகவே இவ்வளவு வேதனைகளையும் இலங்கை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

இனமதபேறுபாடுகளின்றி அனைவரும் அனுபவித்துவருகின்றனர்.அதனால் நாங்கள் இந்த நிலைக்கு கடவுள்தான் வழியை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த பிரார்த்தனையினை முன்னெடுத்திருக்கின்றோம்.

மனித உரிமை,மனித நேயம் இந்த நாட்டில் தொலைந்துவிட்டது.அதனை நாங்கள் தேடவேண்டும்.மனிதன் மனிதனை மதிக்காமல் வாழும் நிலையே காணப்படுகின்றது.இல்லையென்றால் ஆயிரக்கணக்கான மக்கள் பசியினால் பட்டியினால் துன்பத்தினால் வாழும் நிலையேற்பட்டிருக்காது.

மனித உரிமை மீறல்கள் மறையவேண்டும்.இம்மென்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற நிலையே காணப்படுகின்றது.பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டு எத்தனையோ மக்களை காணாமல்ஆக்கிவிட்டார்கள்,எவ்வளவோ பேர் மறைந்துவிட்டார்கள், எங்களுக்கு பேசும் உரிமையில்லை.யாரது புகைப் படத்தினை வைத்திருந்தாலும் கைதுசெய்யப்படும் நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலை மாறவேண்டும். இதற்காக நாங்கள் போராட வேண்டும். இனமத மொழி வேறுபாடுகள் இல்லாமல் போராட வேண்டும்.

Exit mobile version