முப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பூசி மையங்களிற்கு அதிகளவு தடுப்பூசிகளை சுகாதார அதிகாரிகள் வழங்குவதன் காரணமாக சுகாதார துறையினரின் மேற்பார்வையில் உள்ள தடுப்பூசி மையங்களிற்கான தடுப்பூசிகள் குறைக்கப்பட்டுள்ளன என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளிற்கு சுகாதார துறையினர் மட்டுமே பொறுப்பாக இருக்க வேண்டும் என இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும் இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கையில்,
தொற்று நோய் பரவும் வேளைகளில் முதலில் மனதில் தோன்றுபவை மருத்துவமனைகளே. தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கையை முற்றாக சுகாதார தரப்பினரிடம் வழங்க வேண்டும்.
முப்படையினரினால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி மையங்கள் காரணமாகவே சுகாதார துறையினருக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. மேல் மாகாணத்தில் 133 கோவிட் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் காணப்படுகின்ற போதிலும் அந்த தடுப்பூசி செலுத்தும் நிலையங்களிற்கு போதிய தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை.
தடுப்பூசி வழங்குவது என்பது சுகாதார தரப்பினர் முன்னெடுக்கும் நடவடிக்கை என்பதால் இது தொடர்பான அனைத்து பொறுப்பினையும் சுகாதார தரப்பினரிடம் வழங்க வேண்டும். இராணுவத்தினர் உட்பட ஏனைய தரப்பினர் இதில் வழங்கும் உதவியை நாங்கள் பாராட்டும் அதே வேளை தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகளே சுகாதார துறையினரே முன்னெடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.