தொடரும் விவசாயிகள் போராட்டம்: சட்டங்களை திரும்ப பெற முடியாது என மத்திய அரசு அறிவிப்பு
இந்திய அரசு அமல்படுத்தியிருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டங்கள் தங்களுடைய நலன்களுக்கு எதிராக உள்ளதாகக் கூறி டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களின் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இந்திய அரசு பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் “விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு எப்போதுமே அரசு தயாராக உள்ளது. ஆனால், வரும் முன்பு, விவசாயிகள் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டு விட்டு அவர்கள் வர வேண்டும் என்று கூறியுள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.