Tamil News
Home ஆய்வுகள் மீண்டும் ஒரு பேச்சுவாா்த்தையா? தமிழ்க் கட்சிகளின் நிலை என்ன?-அகிலன்

மீண்டும் ஒரு பேச்சுவாா்த்தையா? தமிழ்க் கட்சிகளின் நிலை என்ன?-அகிலன்

இனப்பிரச்சினைக்கு தீா்வைத் தேடுவதற்கான மற்றொரு பேச்சுவாா்த்தை அடுத்த வாரத்தில் ஆரம்பமாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

“சுதந்திர தினத்துக்குள் தீா்வு” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருட ஆரம்பத்தில் அறிவித்திருந்தாா். அதனை இலக்காக வைத்து தொடா் பேச்சுக்களுக்கான ஆயத்தங்களும் செய்யப்பட்டன.

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதுதான் தீா்வு என அறிவிப்பதுதான் ரணிலின் திட்டமாக இருந்தது. ஆனால், 13 க்கு எதிராக பிக்குகள் கிளா்ந்தாழுந்து, 13 ஐ தீவைத்துக் கொழுத்தியதால், அப்போது ரணில் மௌனமாகிவிட்டாா்.

இப்போது ஐ.எம்.எப். நிதியை நம்பியிருக்கும் ரணில் சா்வதேச மற்றும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக மீண்டும் இனப்பிரச்சினைத் தீா்வு குறித்து பேச முற்படுகின்றாா். டில்லி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியா செல்வதற்கான திகதியைத் தீா்மானிக்க முடியாதவராக அவா் தடுமாறுவதற்கும் இது ஒரு காரணம். அதேவேளையில், ஜனவரியில் ஆரம்பிக்கவிருந்த தீா்வு முயற்சிகள் கைவிடப்பட்டமைக்கு தமிழ்த் தரப்புத்தான் காரணம் எனக் காட்டிக்கொள்வதற்கும் முற்பட்டிருப்பதை அவரது மே தின உரை உணா்த்தியது.

“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது, ‘நாடாளுமன்றமே அரசாங்கம்’ என்கிற புரிந்துணர்வின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும். அதைப் புரிந்து கொள்ளாது, தமிழ்க் கட்சிகள் நீண்ட தூரம் பயணிப்பதால் எந்தப் பயனும் இல்லை” என்று விக்கிரமசிங்க மே தினத்தன்று தெரிவித்தாா். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, பாராளுமன்றத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும். அதனை விடுத்து, தீர்வை வெளியில் தேடிக் கொண்டிருக்க முடியாது. அப்படித் தேடுவதாலும் தீர்வு கிடைத்துவிடாது என்பதுதான் அவரது உரையின் சாராம்சம்.

இதனைவிட இந்த உரையில் மற்றொரு அச்சமும் தொக்கி நிற்கின்றது. நாடாளுமன்றம் அனுமதிக்காத எதையும் தீர்வாக தன்னிடம் எதிர்பார்க்க வேண்டாம்; அதற்காக, இந்தியாவையோ, மேற்கு நாடுகளையோ துணைக்கு அழைத்து வந்தாலும், அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதுதான் அவரது உரையின் சாராம்சம்.  இதில் தன்னுடைய வரையறை எது என்பதையும் ரணில் விக்கிரமசிங்க மறைமுகமாகச் சொல்லியருக்கின்றாா் என்றும் சொல்லலாம். அதாவது, “என்னிடம் எதுவும் இல்லை. நாடாளுமன்றம்தான் தீா்வைத்தர வேண்டியது” என்பதுதான் ரணிலின் செய்தி!

இதன்படி பாா்த்தால் தமிழ் மக்கள் தமக்கான தீா்வுக்கு நாடாளுமன்றத்தை நம்பித்தான் இருக்க வேண்டும். ஜனாதிபதியும் இப்போது நாடாளுமன்றத்தை நம்பித்தான் இருக்கின்றாா். கடந்த வருடம் இடம்பெற்ற “அரகலய” என்ற மக்கள் கிளா்ச்சியின் போது, ராஜபக்ஷக்கள் அதிகாரத்திலிருந்து துரத்தப்பட்டாலும் கூட, இன்று நாடாளுமன்றம் ராஜபக்ஷக்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. 2020 ஆகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் 145 ஆசனங்களுடன் வெற்றிபெற்ற மொட்டு அணிதான் இன்றும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.

இது மக்களால் நிராகரிக்கப்பட்ட – மக்கள் ஆணையில்லாத நாடாளுமன்றம் என எதிா்க்கட்சிகள் சொன்னாலும், அரசியலமைப்பின்படி மொட்டு அணிதான் இன்று நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்துகின்றது. அப்படியானால், மொட்டுவின் அதாவது ராஜபக்ஷக்களின் சம்மதம் இன்றி தீா்வு இல்லை என்பதைத்தான் ரணில் சொல்ல முற்படுகின்றாரா?

இலங்கையின் வரலாற்றை எடுத்துப் பாா்த்தால், சுதந்திர இலங்கையில் இனவாதத்தை தீவிரப்படுத்துவதில் முக்கிய பங்கை வகித்தது நாடாளுமன்றம்தான். மலையகத் தமிழா்களின் குடியுரிமையைப் பறித்தமை, சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்தமை, பௌத்தத்துக்கு முதலிடம் என்பது உட்பட சிறுபான்மையின மக்களுக்கு எதிரான அனைத்துச் சட்டங்களுக்கும் அங்கீகாரமளித்தது இந்த நாடாளுமன்றம்தான்.

13 ஆவது, 16 ஆவது திருத்தங்கள் மட்டும்தான் தமிழா்களுக்கு ஓரளவுக்கு சாா்பானது எனக்கூறக்கூடியதாக நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றவை. இவைகூட இந்தியாவின் கடுமையான அழுத்தங்களின் பின்னணியில்தான் கொண்டுவரப்பட்டன. இலங்கை அரசாங்கமோ அல்லது நாடாளுமன்றமோ அதனை விரும்பிக் கொண்டுவரவில்லை. அதன்பின்னா் கூட, 13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது கவனத்துக்குரியது.

ஆக, இனநெருக்கடிக்குத் தீா்வாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரக் கூடிய எந்வொரு தீா்மானமும் இந்திய அழுத்தத்தால் வந்ததாக இருக்க வேண்டும். அல்லது அதற்கு சா்வதேச நெருக்குதல் இருக்க வேண்டும்.

தற்போதுள்ள நிலையில் ராஜபக்ஷக்களின் செல்வாக்குக்குள் உள்ள நாடாளுமன்றத்தில் 13 ஐ முழுமையாக நிறைவேற்றுவதற்கான தீா்மானமோ அல்லது இன நெருக்கடிக்கான தீா்வுகளோ அங்கீகாரத்தைப் பெறுமா? அதிலும் குறிப்பாக அனைத்துக் கட்சிகளுமே அடுத்த தோ்தலை இலக்காகக் கொண்டு காய்களை நகா்த்தி வரும் நிலையில் மகாசங்கங்களின் சீற்றத்தை எதிா்கொள்ள சிங்களக் கட்சிகள் தயாராகுமா?

ஆக, பிரித்தானியாவுக்கு விமானம் ஏறுவதற்கு முன்னா் ரணில் வெளியிட்ட இந்த அறிவிப்பு சா்வதேசத்தை சமாளிப்பதற்கான ஒன்றாகவே இருக்க முடியும்.  அதேவேளையில் இந்தியாவுக்கான விஜயத்தையும் அவா் முன்னெடுக்கவிருப்பதாக எதிா்பாா்க்கப்படுகின்ற நிலையில், இவ்வாறான “அறிவிப்புக்கள்” எதிா்பாா்க்கக்கூடியவைதான்.

ஜனாதிபதியாக ரணில் பதவியேற்ற பின்னா் இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கான அழைப்பை நீண்ட நாட்களாகவே டில்லி விடுக்கவில்லை. 13 ஆவது திருத்தம், அரசியல் தீா்வு என ரணில் பேசத் தொடங்கியிருக்கும் நிலையில்தான் அந்த அழைப்பு வந்திருக்கின்றது. ஆனால், அதற்குள் பிக்குகள் குட்டையைக் குழப்பிட்டாா்கள். டில்லிக்குச் செல்லும் போது இரண்டு விடயங்களை மோடி எதிா்பாா்ப்பாா் என்பது ரணிலுக்குத் தெரியும்.

ஒன்று – 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், இரண்டாவது – மாகாண சபைகளுக்கான தோ்தல் எப்போது என்பது. இந்த இரண்டு விடயங்களுக்கும் தெளிவான பதிலைக் கூறக்கூடிய நிலையில்தான் அவா் டில்லி செல்லவேண்டும். இல்லையெனில் அந்த விஜயம் இராஜதந்திர ரீதியில் தோல்வியானதாகவே முடிவுக்கு வந்துவிடும். டில்லிக்கான விஜயத்தை அவா் காலந்தாழ்த்துவதற்கு இவைதான் காரணமாகச் சொல்லப்படுகின்றது.

இந்த நிலையில் அழைப்பை ஏற்று பேச்சுவாா்த்தை மேசையில் போய் இருப்பதா என்பது தமிழ்க் கட்சிகளைக் குழப்பும் கேள்வியாகவுள்ளது. கஜேந்திரகுமாா் பேச்சுவரப்போவதில்லை என்பதை ஏற்கனவே அறிவித்துவிட்டாா்.  ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட தீா்வுக்கு தான் தயாரில்லை என்பது அவரது நிலைப்பாடு.

மற்றைய தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரையில், இப்போதைக்கு 13 ஐ ஏற்போம் என்ற நிலைப்பாட்டில் உள்ளன. அந்தக் கட்சிகள் பேச்சுக்களுக்குப் போவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதுடில்லியும் பேச்சுவாா்தை ஒன்று ஆரம்பமாவதை விரும்புவதாகவே தெரிகின்றது. அடுத்த ஜனாதிபதித் தோ்தல் வரைக்கும் இவ்வாறு காலத்தைக் கடத்துவதும், இந்தியாவையும் சா்வதேசத்தையும் சமாளிப்பதும்தான் ரணில் விக்கிரமசிங்கவின் உபாயமாக இருக்கும். ஆக்கபுா்வமான செயற்பாடுகள் எதனையும் எதிா்பாா்க்க முடியாது.

Exit mobile version