அமெரிக்காவில் சுமார் 3,000 உயிர்களைப் பலிவாங்கிய 9/11 தீவிர தாக்குதலின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டெம்பர் 11) இதே நாளில் தான் அமெரிக்க நேரப்படி சரியாக காலை 8.45 மணிக்கு நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டத்தின் வடக்கு கோபுர பகுதியில், கடத்தப்பட்ட விமானம் ஒன்று மோதியது.
உலகத்தின் போக்கையே மாற்றி அமைத்த சம்பவம் அது. அதன் பின்னர் உலகெங்கும் பல அமைப்புகள் தடை செய்யப்பட்டன.
இந்த 9/11 தாக்குதலின் விளைவாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் போர் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் மற்றும் தீவிர தாக்குதலில் பல இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் பெருநிலப்பரப்பில் மோசமான தீவிரவாத தாக்குதலின் தொடக்கத்திற்கான அறிவிப்பாக இந்தச் சம்பவம் நடைபெற்றது. அதுமட்டுமின்றி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஜிஹாதிகள் அதிகமாக ஈர்க்கப்பட இந்தச் சம்பவம் தூண்டுதல் அளித்திருந்தது.
அப்போது சம்பவம் நடந்த இடத்தில் இருந்த அர்டி வேன் வொய் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
“அது ஒரு அழகிய நாள். இப்போதும் நீல வானத்தைப் பார்க்கும் போதெல்லாம் நான் அந்த நாளை நினைவு கூருவேன்“ என்றார். இவர் உலக வர்த்தக மையக் கட்டத்தின் அருகிலுள்ள ஒரு கட்டடத்தில் பணிபுரிந்தார். சரியாக காலை 8.46 மணிக்கு பெரும் சத்தம் கேட்டதாகக் கூறுகின்றார்.
“என்ன நடந்தது என அவதானிப்பதற்குள் அனைவரும் கட்டடத்தை விட்டு வெளியேறினார்கள். ஏதோ வேறொரு உலகிற்குள் சென்றது போல உணர்ந்தோம். அனைத்தும் அமைதியாகி விட்டது. அனைத்தும் ஏதோ ஆறுதலாக நடப்பது போல ஆகிவிட்டது.” என்று அர்டி வேன் வொய் கூறினார்.
பதின்மூன்று ஆண்டுகள் தாம் பார்த்து வந்த பணியை விட்டு வேறொரு பணிக்குச் சென்றார். அதன் பின்னர் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட விடயம் குறித்து பலருக்கு கடிதம் எழுதினார். அன்று நடந்த விடயங்களை விபரித்தார். இது அவருக்கு பாராட்டுக்களை பெற்றுக் கொடுத்தன.
இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்து ஒரு குறுந்தகட்டை பழமையான பொருட்கள் சேகரிக்கும் ஒருவர் வாங்கினார். அதில் ஏறத்தாழ 2400 புகைப்படங்கள் இருந்தன. அவை அனைத்தும் நியுயோர்க் 9/11 தாக்குதல் குறித்த புகைப்படங்கள்.
தாக்குதலுக்கு உள்ளான உலக வர்த்தக மையத்தின் சிதிலங்களை அப்புறப்படுத்திய போது எடுத்த புகைப்படங்கள் அவை. சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் பல்வேறு கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றது.
புகைப்படங்கள் உள்ள குறுந்தகடுகள் அனைத்தும் மோசமான நிலையில் இருந்தாலும், அத்தனை புகைப்படங்களையும் மீட்க முடிந்தது.
இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் ஃபிளிக்கர் தளத்தில் ஏற்றப்பட்டுள்ளன.