Tamil News
Home செய்திகள் வடக்கு – கிழக்கில் ஹர்த்தாலை முன்னெடுக்க 6 கட்சிகள் கூட்டாக கோரிக்கை

வடக்கு – கிழக்கில் ஹர்த்தாலை முன்னெடுக்க 6 கட்சிகள் கூட்டாக கோரிக்கை

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் செவ்வாய் கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்க 6 கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவர் க.சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் ஆகியோரின்  கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் எமது இனத்திற்கு பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், எமது இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் பேரினவாத அரசின் திட்டமிட்ட, எமது சுயநிர்ணய உரிமையை நீர்த்துப் போக வைக்கும் வகையில் எமது தாயக மண்ணில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில அபகரிப்பு, குடியேற்றங்களின் மூலம் குடிப்பரம்பலை சிதைத்தல், எமது தொன்மையை வெளிப்படுத்தும் சான்றுககளை அழித்தொழித்தல், இதற்கு ஏதுவாக தமிழ் மக்களின் தொன்மையை வெளிப்படுத்தும் சான்றுகளான சைவ ஆலயங்களை இடித்தும், அழித்தும், பௌத்த சின்னங்களை நிறுவியும், இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றை சிதைக்கும் அரசின் அனைத்து கட்டமைப்புக்களின் செயற்பாட்டை எதிர்த்தும்,

அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பொது கட்டமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மாணவர்கள் மற்றும் தமிழ் தேசியப் பற்றாளர்கள் என அனைத்து மக்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 25.04.2023 அன்று எமது தாயகப் பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி வடக்கு – கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்க தீர்மானித்துள்ளோம்.

இதற்கு அனைவரது ஆதரவையும் கோரி நிற்கின்றோம் என அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த அறிக்கையில் தமிழ் தேசிய கட்சிகளான தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டனி என்பன கையொப்பம் இடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version