Tamil News
Home செய்திகள் வடக்கு கிழக்கில் கூட்டமைப்பினர் தோல்வி கண்டால், அது தமிழினத்தின் தோல்வி செந்தில்நாதன் மயூரன்

வடக்கு கிழக்கில் கூட்டமைப்பினர் தோல்வி கண்டால், அது தமிழினத்தின் தோல்வி செந்தில்நாதன் மயூரன்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் தோல்வி அடையுமாக இருந்தால், அது ஒட்டுமொத்த தமிழினத்திற்குமான படுதோல்வி என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக நாடாளுமன்றத் தேர்தலை நான் சந்திக்கின்றேன். இதுவரை காலமும் ஏனைய வேட்பாளர்களுக்காக உங்களுடைய பிரதேசங்களில் வாக்குகளை சேகரிக்க வந்த நான், இன்று முதல் தடவையாக எனக்கு உங்களுடைய வாக்குகளை பெறுவதற்காக உங்கள் முன் நிற்கின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் கூட்டமைப்பில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் பல விமர்சனங்கள் இருக்கின்றது. அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது இருக்கின்ற விமர்சனங்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் கருத்துக்கள் தான் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலமிழக்க செய்வதாக அமைகின்றன.

இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறிக்கொண்டு, அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கான வாய்ப்பினை நீங்கள் வழங்கா விட்டால், இனிவரும் காலங்களில் இளைஞர்கள் ஒரு தேர்தலை அல்லது ஒரு அரசியலை சந்திக்கப் பயப்படுவார்கள். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனக்கு நீங்கள் ஒரு வாய்ப்பினை அளிக்கின்ற சந்தர்பபத்திலே உங்களுடைய வாக்குகளுக்கு நம்பிக்கை இல்லாதவனாக நான் மாறுகின்ற சந்தர்ப்பம் ஏற்படுமானால், அந்த கதிரையை அலங்கரிக்க மாட்டேன் என நான் உங்களுக்கு சத்தியம் செய்கின்றேன். உங்களை வைத்து அரசியல் செய்த காலம் போய் இளைஞர்கள் நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம்.

கடந்த காலங்களிலே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் காரணமாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமிழந்து சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு அவர்களே பதில் கூற வேண்டும். இருபத்தியிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக மாறியுள்ளோம்.

நீங்கள் எங்களுக்கு கைகொடுக்க வேண்டும் என்பது தான் எங்களின் எதிர்பார்ப்பு. உங்களுக்கான சரியான அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். எங்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக சுயேட்சை கட்சிகள் களம் இறக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் நோக்கங்கள் சிங்கள தேசிய கட்சிகள் ஊடாக எங்களின் வன்னி மாவட்டத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும் என்பது தான்.

ஒவ்வொரு கட்சிகளும் அரசியல் நோக்கத்துடன் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் எங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை தொடக்கம் அடிப்படைப் பிரச்சினை வரை பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் தோல்வி அடயுமாக இருந்தால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான இழப்பல்ல. ஒட்டுமொத்த தமிழினத்திற்குமான படுதோல்வி என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Exit mobile version