யாழ்ப்பாணம், பலாலி – வசாவிளான் பகுதியில் உயர் பாதுகாப்பு வலய இராணுவக் குடியிருப்புக்குள் உள்ள ஆலயங்களில் தற்காலிக வழிபாடுகளை மேற்கொள்வதற்குப் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்துக்குள் செல்வதற்காகப் பொதுமக்கள் பலாலி வீதிக்கு அருகில் அமைந்துள்ள வசாவிளான் இராணுவக் குடியிருப்புக்கு முன்னால் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பகுதியில் குழுமியிருந்தனர்.
இதைச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களான பிரபாகரன் டிலக்சன், சுந்தரம்பிள்ளை ராஜேஸ்கரன், சின்னையா யோகேஸ்வரன் ஆகியோர் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டு அவர்களின் தொலைபேசியில் இருந்த காணொளிகளும் அழிக்கப்பட்டன.
விடுவிக்கப்பட்ட பகுதியில் வீதி யோரமாக நின்றிருந்த பொதுமக்களையும், அவர்கள் ஆலயங்களுக்கு வழிபடுவதற்கு ஆயர்த்தமாவதையும் காணொளி பதிவு செய்த ஊடகவியலாளர்கள் மீதே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.