ரஷ்யாவில் அமைதியாக போராடும் போராட்டக்காரர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக ரஷ்சிய அதிகாரிகள் செயல்படுவதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தனது ட்விட்டரில் வெளியிட்ட கருத்தை ரஷ்சியா நிராகரித்துள்ளது.
மேலும் ரஷ்யா போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் நிலைமையை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாகவும், ரஷ்யாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டி உள்ளது.
ரஷ்யாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி, கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நச்சு தாக்குதல் காரணமாக கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 17-ம் திகதி நவால்னி ரஷயா திரும்பிய போது மாஸ்கோ விமான நிலையத்தில் வைத்து மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நவால்னி கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நவால்னியை விடுதலை செய்யக்கோரியும் அதிபர் புதினை பதவி விலகக்கோரியும் பல்லாயிரக்கணக்கான நவால்னியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருந்தும் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.