Home செய்திகள் மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப் பழக்கத்தை தடுப்பதில் பெற்றோருக்கே பெரும்பொறுப்பு – ஐங்கரநேசன்

மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப் பழக்கத்தை தடுப்பதில் பெற்றோருக்கே பெரும்பொறுப்பு – ஐங்கரநேசன்

Ayngaranesan 02 மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப் பழக்கத்தை தடுப்பதில் பெற்றோருக்கே பெரும்பொறுப்பு - ஐங்கரநேசன்
பாடசாலைகளில் படையினர் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ளும் அளவுக்கு மாணவர்களிடையே என்றுமில்லாதவாறு போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்திருக்கிறது. போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்புகின்ற இராணுவப்பாணி நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகுவதைத் தடுக்கமுடியாது. மாணவர்களிடையே போதைப்பழக்கம் ஏற்படுவதைத் தடுப்பதில் படைத்தரப்புஇ ஆசிரியர்கள் எல்லோரையும் விடப் பெற்றோருக்கே பெரும் பொறுப்பு உண்டு என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நாவற்குழியில் இடம் பெற்றது. மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இலங்கை அரசாங்கம் இப்போது மேற்கொண்டுள்ள போதைப்பொருளுக்கு எதிரான யுக்திய நடவடிக்கையால் போதைப்பாவனையை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்துவிடமுடியாது. பெரும் வலைப் பின்னலாக இயங்கிக்கொண்டிருக்கும் போதை வியாபாரத்தில் சிக்கிவருவது கடத்தல்காரர்களும் சில்லறை வியாபாரிகளும் போதைப்பொருள் பாவனையாளர்களும் மாத்திரம்தாம். இதில் ஈடுபட்டுள்ள பெரும் முதலாளிகள் அரசஉயர்மட்டங்களின் ஆசீர்வாதத்தோடு பாதுகாப்பாகத்தான் உள்ளார்கள் உறங்கு நிலையில் இருக்கும் இவர்கள் விரைவிலேயே மீள எழுவார்கள்.

கஞ்சாவும் கெரோயினும் மாத்திரம்தான் போதைப்பொருள் அல்ல. கைவிடமுடியாத எல்லாப் பழக்கங்களுமே போதைதான். கைவிடமுடியாத அளவுக்கு புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும நேரகாலம் பாராது தொலைக்காட்சித்தொடர்களில் மூழ்கிக்கிடைப்பதும், இரவில் படுக்கைக்குச் செல்லும் போதும் கைப்பேசிகளுடனேயே செல்வதும் போதைதான். பிள்ளைகள் தங்கள் ஆதர்சவழிகாட்டிகளாக முதலில் பெற்றோர்களையே ஏற்றுக்கொள்கிறார்கள். போதைப்பழக்கங்களுக்கு ஆளாகியுள்ள பெற்றோர்களால் ஒருபோதும் தங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்ட இயலாது. பிள்ளைகள் தவறிழைக்கும்போது தட்டிக்கேட்கவும் முடியாது.

பெற்றோர்கள் பாடசாலைகளுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பிள்ளைகளை அனுப்பிவைப்பதுடன் தங்கள் கடமைகள் முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். முழுநாட்டையுமே போதைப்பொருட் பாவனை ஒரு புற்றுநோயாகப் பீடித்துவரும் நிலையில் எமது பிள்ளைகள் பெற்றோர்களால் கண்டிப்பாகக் கண்காணிக்கப்படவேண்டும். அவர்களுடைய நண்பர்கள் தொடர்பாகப் பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். போதைப்பொருட் பாவனை ஒருவழிப்பாதை போன்றது. இதில் ஒருதடவை பிரவேசித்தால் மாணவர்களால் திரும்பிவர முடியாது என்பதைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்” என்றும் தெரிவித்தார்.

Exit mobile version